ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்றத்தில் நெருக்கடி கொடுக்க இந்தியா கூட்டணி முடிவு

viduthalai
4 Min Read

20 ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
பெண்களுக்கு எதிரான வன்முறை, விவசாயிகள் பிரச்சினை,
வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பானவைகளில்

 

புதுடில்லி, ஜூலை 20 நாடாளு மன்றக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு எதிராக செயல்படுவது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் நேற்று (19.7.2025) தீவிர ஆலோசனை நடத்தின. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பங்கேற்றன.

இந்தியா கூட்டணி உருவானது

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைத் (என்டிஏ) தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி  உருவானது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திரி ணமூல், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

மேலும், இந்தியா கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என அதில் இருந்த பெரும்பாலான கட் சிகள் அவ்வப்போது கூறிவந்தன.

இதற்கிடையே, 2024 மக்கள வைத் தேர்தலுக்கு பின்னர் நடை பெற்ற அரியானா, டில்லி சட்டப்பேரவை தேர்தல் களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனித் தனியாகவே போட்டியிட்டன. மேலும், வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இருந்தபோதிலும், நாடாளு மன்ற கூட்டம் போன்றவற்றில் ஒரு மித்த எதிர்ப்பை தெரிவிப்ப தற்காக காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணி என்ற பெயரில்தான் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தது.

மசோதாக்கள் அறிமுகம்

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (21.7.2025) தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான பல மசோதாக்களை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல, எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

இதை தொடர்ந்து, நாடா ளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது குறித்து ஆலோசி க்கும் வகையில், மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக எதிர்க்கட்சி கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.  இந்த சூழலில், இந்தியா கூட்டணி யில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்த கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் (18.7.2025) அறிவித்தார்.

ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நேற்று மாலை நடை பெற்றது. பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல், அதை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பவும், நீண்ட விவாதம் நடத்தவும் ஆளும் பாஜக அரசை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20 கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பங்கேற்ற தலைவர்கள் யார்?

காங்கிரஸ் சார்பில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மகாராட்டிரா மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, திமுக சார்பில் திருச்சி என்.சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, மூத்த தலைவர் எம்.ஏ.பேபி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி பிரசாத், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கேள்வி எழுப்ப உள்ள பிரச்சினைகள்

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்ட விவகாரம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஜம்மு – காஷ்மீருக்கு மாநில தகுதி வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவது, விவசாயிகள் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், அகமதாபாத் விமான விபத்து, நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவை தொடர்பாக அவையில் பிரச்சினை எழுப்ப வும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து டில்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வீட்டில், அனைத்துக் கட்சி தலைவர்களும் 4 நாட்களுக்கு முன்பு முக்கிய ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *