சபரிமலை, ஜூலை 16 கேரள உயர்நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அஜித்குமார் டிராக்டரில் சபரிமலை சென்று திரும்பியது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கும் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கும் சரக்குகள் கொண்டு செல்வதற்காக டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஆப் சீசனில் சபரிமலைக்கு செல்லும் ஊழியர்கள் இந்த டிராக்டரில் செல்வது வழக்கம். அதுபோல நடை திறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் நடை அடைக்கும் நாட்களிலும் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் டிராக்டர்களில் பயணம் செய்வர்.
மலைப்பாதையில் டிராக்டர் ஓட்டுவதால் சூழல் சீர்கேடு மற்றும் விலங்குகள் அச்சம் கொள்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் இதை தடை செய்துள்ளது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி சபரிமலையில் நவக்கிரக கோயில் குட முழுக்கு நடைபெற்ற போது தரிசனத்திற்காக வந்திருந்த கேரள காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அஜித்குமார் டிராக்டரில் வந்து திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக காட்சிப் பதிவு மற்றும் ஒளிப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும் தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது. கேரள உயர் நீதிமன்றம் நியமித்துள்ள தனி ஆணையரிடம் இது தொடர்பாக விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.