சென்னை, ஜூலை 4- தரமணியில் ரூ.40 கோடியில் ‘தமிழ் அறிவு வளாகம்’ அமைப்ப தற்கான கட்டுமானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.7.2025) அடிக்கல் நாட்டி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுத் தலமாகச் செயல் படவிருக்கும் ‘தமிழ் அறிவு வளாகம்’ கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார்.
1994ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மீள்கட்டமைக்கும் செயல்பாடுகளையும் இந்நூலகம் மேற்கொண்டு வருகிறது. இதனை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் நோக்குடன், தமிழ் அறிவு வளாகத்தை உருவாக்கும் வகையில் சென்னை, தரமணியில் உள்ள தொழில்நுட்ப வளாகத்தில் 30,000 சதுர அடி நிலத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சிந்துவெளி ஆய்வு மய்யம், பொதுவியல் ஆய்வு மய்யம் ஆகியவை இவ்வளாகத்தில் முக்கிய அங்கங்களாகும். இதற்கான மொத்த கட்டுமான செலவு ரூ.40 கோடி ஆகும். தமிழ்நாடு அரசு, தமிழ்கூறும் நல்லுலகத்தின் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், புரவலர்கள் உதவியுடன் இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரை முருகன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், மரியம் ராம், ராமசந்திரன், இந்தி ரன், சுந்தர் கணேசன், கட்டட வடி வமைப்பாளர் ராஜேந்திரன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் திட்டப்பணி இயக்குநர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.