ஆங்கில நூல்களுக்கு ஹிந்தி – சமஸ்கிருதப் பெயர்களா?

viduthalai
3 Min Read

புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்த ஆண்டு முதல் ஒன்றிய கல்வி அமைச்சரகம் ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளிலும் பாடநூல்களை சமஸ்கிருத ஹிந்தி மயமாக்கி உள்ளது. அதிலும் ஆங்கிலத்தில் உள்ள சொற்களை தவிர்த்து ஹிந்தி, சமஸ்கிருத சொற்கள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது சமஸ்கிருத ஹிந்தியைத் திணிக்கும் மோசமான நடவடிக்கை ஆகும். மேலும் தமிழ்நாட்டின் வழிகாட்டுதலின் பேரில் பல மாநிலங்கள் மூன்று மொழிக் கொள்கையை எதிர்த்துப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹிந்தி அல்லாத மாநிலங்களில் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

இதுவரை, ஒன்றிய அரசின் மொழி நூல்கள் எப்போதும் அதே மொழியில் தலைப்புகளைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு வரை 6 மற்றும் 7ஆம் வகுப்புக்கான பழைய ஆங்கில பாடப்புத்தகங்கள் முறையே ‘ஹனிசக்கிள்’ மற்றும் ‘ஹனிகோம்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தன.

இரண்டாம் வகுப்புகளுக்கான புதிய ஆங்கில மொழி பாடப்புத்தகங்களின் தலைப்பு ‘பூர்வி’, இது ஹிந்திச் சொல்லாகும். “கிழக்கு” என்ற பொருளுடன், சமஸ்கிருத சொற்களில் வரும்  ராகத்தின் பெயரும் ஆகும்.

1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழி பாடப் புத்தகங்கள் ‘மிருதங்க்’ என்றும், 3 மற்றும் 4ஆம் வகுப்புகளுக்கானவை ‘சந்தூர்’ என்றும் மறுபெயரிடப்பட்டுள்ளன. இரண்டுமே இசைக் கருவிகளின் பெயர்கள்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற பாடங்களுக்கு, முன்னணி பாடப் புத்தகத் தயாரிப்பு அமைப்பு தனது புத்தகங்களை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது பதிப்புகளில் வெளியிட்டது.

இதுதொடர்பாக ஒன்றிய கல்விப் பாடநூல் தயாரிப்பு குழுவில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் கூறுகையில், இந்தப் புத்தகங்கள் பாரம்பரியமாக அவை வெளியிடப்பட்ட மொழிக்கு ஏற்ப ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் தலைப்புகளைக் கொண்டிருந்தன.

6ஆம் வகுப்புக்கான முந்தைய கணித புத்தகம் ஆங்கில பதிப்பிற்கு ‘Mathematics’ என்றும், ஹிந்தி பதிப்பிற்கு ‘Ganit’ என்றும், உருது பதிப்பிற்கு Riyazi என்றும் தலைப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், கடந்த ஆண்டு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு பதிப்புகளுக்கும் தலைப்பை ‘கணித பிரகாஷ்’ என மாற்றப்பட்டிருக்கிறது.

6ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாடப்புத்தகத்தின் ஆங்கில பதிப்பு “எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியான்ட்” என்ற தலைப்புடன் வருகிறது, அதே நேரம் ஹிந்தி பதிப்பு “சமாஜ் கா அத்யயன்: பாரத் அவுர் உஸ்கே ஆகே” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

2006இல் என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தக மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்த டில்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் அபூர்வானந்த், ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தித் தலைப்புகளை வழங்கும் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கினார்.

“இது ஹிந்தி காலனியாதிக்கம். என்.சி.இ.ஆர்.டி. இதை மிகவும் கீழ்த்தரமான முறையில் செய்கிறது,” என்று அவர் கூறினார். என்சிஇஆர்டி தலைப்புகளை வழங்கும் விதம் தமிழ்நாட்டின் மொழிகொள்கைக்கான போராட்டம் சரியென நிரூபித்துள்ளது.

இது ஹிந்தி பேசாத மக்களிடையே குறுக்கு வழியில் ஹிந்தியைத் திணிக்கிறது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களுக்கு ஹிந்தியில் தலைப்புகளை வழங்குவதற்கான காரணங்களை கேட்டு
என்.சி.இ.ஆர்.டி. இயக்குநருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அவரது பதில் எதிர்பார்க்கப்படுகிறது. என்.சி.இஆர்.டி. 2020ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப 2023 முதல் புதிய பாடப்புத்தகங்களின் தொடரை வெளியிட்டு வருகிறது.

2023இல் 1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டது, 3 மற்றும் 6ஆம் வகுப்புகள் 2024இல் புதிய புத்தகங்களைப் பெற்றன. இப்போது 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான புதிய புத்தகங்களை வெளியிடுகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை முழுமையாக சமஸ்கிருத ‘ஹிந்தி மயமாக்கம்’ நடந்துள்ளது

எடுத்துக்காட்டாக,  ‘குடும்பச் சங்கிலி’ (பரம்பரை) என்ற ஆங்கில நூலில் பர் தாதா, பர் தாதி, போத்தா, போத்தி, பர் போத்தா, பர்போத்தி, தாதா, தாதி, நானா நானி, என்று எழுதி பின்னர் பாதர் மதர் என்று பெயரளவிற்கு ஆங்கிலத்தில் பெயர் கொடுத்துள்ளது. பிறகு பேட்டா பேட்டி என்று மீண்டும் ஹிந்தியிலேயே கொடுத்துள்ளது.

மேலும் உடற்கல்வி ஆங்கில நூலுக்கு கேள் யோகா (விளையாட்டு யோகா) என்றும், தொழிற்கல்வி நூலான வெகேசனல் ஆங்கில பாடநூலுக்கு கவுசால் போத்(துடிப்பான கல்வி) என்றும், ஓவியம் இதர கைவினை கலைப்பொருள் தயாரிக்கும் பாட நூலிற்கு பன்சுரீ (புல்லாங்குழல்) என்றும் பெயர் வைத்துள்ளனர்.

ஆங்கில நூல் முழுவதுமே ஹிந்தி மற்றும் சமஸ்கிருத சொற்கள் – 60 விழுக்காடு ஹிந்தியிலேயே எழுதப்பட்டுள்ளது.

இது என்ன கூத்து! ஹிந்தி இங்கிலீஷ் என்று ஒரு புதிய மொழியை உருவாக்கப் போகிறார்களா? வெட்கக் கேடு!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *