இஸ்ரேல் – ஈரான் மோதல் எதிரொலி பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 16- இஸ்ரேல்- ஈரான் மோதல் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சமமான நிலைப்பாடு

இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான போர் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே புவியியல் ரீதியாக எல்லைகளை இந்தியா பகிர்ந்து கொள்ள வில்லை என்றாலும், அந்த நாடுகளின் மோதல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய  நிலையில் இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமமான நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. இருபக்கமும் சாயாமல் நடுநிலையில் உள்ளது.

இருந்தாலும் இந்த போர் நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஹார்மூஸ் ஜலசந்திதான். இது ஈரான் மற்றும் ஒமன் இடையே அமைந்துள்ள ஒரு குறுகிய கடல் பாதை. இந்த பாதை, பாரசீக வளைகுடாவை ஓமன் மற்றும் அரேபிய பெருங்கடல் பகுதிகளுடன் இணைக்கிறது. பனாமா கால்வாய் போல் இதுவும் கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமானதாகும்.

உலக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் இந்த கடல் பாதை வழியாக செல்கிறது. அதாவது ஈரான் உள்பட அரபு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் தங்களது கப்பலை ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கொண்டு செல்கின்றன.

60 சதவீதம்

இந்தியாவை பொறுத்தவரை ஒரு ஆண்டின் கச்சா எண்ணெய் தேவை 251 மில்லியன் டன் ஆகும். அதில் 12 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 88 சதவீதமான 221 டன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் 100 சதவீதம் என்று கணக்கிட்டால், அதில் அதிகபட்சமாக 38 சதவீதம் ரஷ்யாவிடம் சலுகை விலையில் வாங்குகிறது.

2 சதவீதம் அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது. மீதமுள்ள 60 சதவீதம் முழுவதும் அரபு நாடுகளில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக தான் இந்தியாவின் துறைமுகத்திற்கு வருகின்றன.

அதுமட்டுமின்றி போர் முழு அளவில் தொடங்கி விட்டால் இந்தியாவிற்கு ஈரான் மட்டுமின்றி மற்ற அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் அவர்கள் விலையையும் அதிகரித்து விடுவார்கள். தற்போது ஒருபேரலுக்கு 77 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மற்றும் எரிவாயு விலை கடுமையாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா இப்போதே அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி உள்ளது.

கடுமையான விலை உயர்வு

ஒருவேளை அரபு நாடுகளில் இருந்து சிக்கல் ஏற்பட்டால் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, இஸ்ரேல்-ஈரான் மோதலால் ஹார்மூஸ் கடல் பாதையில் பிரச்சினை ஏற்பட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி தடை படும். இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயர்வு ஏற்படும். மேலும் 92 லட்சம் இந்தியர்கள் அரபு நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் அங்கு வேலையிழந்து ஊர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *