அக்கம் பக்கம் அக்கப் போரு! ஒரு விபத்தும், பலரின் அறிவுப் பலியும்

viduthalai
2 Min Read

கடந்த 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் தில் நடந்த விமான விபத்து, பெரும் அதிர்ச்சி அலை களைத் தோற்றுவித்துள்ளது உண்மை தான். ஊடகங்கள் ஏராளமாக நிறைந்திருக்கும் சூழலில், பல்வேறு செய்திகள், உறவுகளின் சோகங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றுடன் மூடநம்பிக்கையைப் பரப்பும் செய்திகளும் உலா வருவதில் குறைச்சல் இல்லை.

பா.ஜ.க. அறிவுசார் (!) பிரிவின் தலைவர் ‘யதார்த்த’ ஜோதிடர் ஷெல்வி என்றொருவர், ஏற்கெனவே ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார்; கட்சி தொடங்குவார்; இல்லையென்றால் நான் ஜோதிடம் பார்ப்பதையே விட்டுவிடுகிறேன் என்றவர். ரஜினியும் கட்சி தொடங்கவில்லை; சொன்னபடி செய்யும் பழக்கமில்லாத மூடநம்பிக்கை வியாபாரி, தன் தொழிலையும் விட்டுவிடவில்லை.

அப்படிப்பட்ட சொல்வாக்கு நிறைந்தவர் கடந்த பிப்ரவரியில் ஒரு கருத்துச் சொன்னாராம்.

ஆனி மாதத்தில் வெள்ளம் வரும், புயல் வரும் என்பார்கள், இயற்கைப் பேரழிவுகள் நடக்கும். விமான விபத்துகள் நடக்கலாம்; மக்கள் பேரழிவுகள் காரணமாக மொத்தமாகச் சாகலாம்; ஆபத்தான நோய்கள் வரலாம் என்றெல்லாம் சொன்னாராம். இப்போது விமான விபத்து நடந்துவிட்டதாம். குந்தாங்கூரா அடிச்சுவிடுறதுக்குப் பேரு கணிப்பாம்! இன்னும் ரெண்டு சேர்த்து அடித்துவிட்டாலும், நடக்கவில்லை என்று யாரால் சொல்ல முடியும்? இது தான் அந்த நோய் என்றும், இந்த விபத்து தான் இவர் சொன்னது என்றும், இந்த மழையை அன்றே கணித்தார் என்றும் ஊடக வியாபாரிகள் எழுதி மேலும் மகோன்னதப் படுத்துகின்றனராம்.

அடிப்படையிலேயே, இவர் சொன்ன ஆனி மாசம் இனிமேல் தான் ஆரம்பம். விபத்து நடந்தது வைகாசி மாதத்தில்! முதல் பாயிண்டே அவுட்! ஜோதிட தீர்க்கதரிசனம் எல்லாம் சொல்பவர்கள், எந்த நேரம், எந்த விமானம், எத்தனை பேர், எங்கிருந்து புறப்படும் என்றெல்லாம் சொல்ல வேண்டாமா? குறைந்தது இந்தியாவில் நடக்கும் என்றாவது சொன்னாரா? பிறந்த நேரம் மட்டும் துல்லியமாக வேண்டும் என்று அளந்துவிடுவார்களே! ரிசல்ட் மட்டும் குத்துமதிப்பாகத் தான் வருமாமா? எவ்வளவு போங்கு ஆட்டம்!

இன்னொரு பக்கம் அதிர்ஷ்ட எண்ணே, துரதிர்ஷ்டமானது என்றொரு செய்தி. குஜராத்தின் மேனாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் அந்த விமானத்தில் பயணித்து விபத்தில் மறைந்தவர்களுள் ஒருவர். அவருக்கு 1206 என்பது தான் ராசியான எண்ணாம். அவருடைய வாகனங்கள் எல்லாம் அந்த எண்ணில் தான் இருக்குமாம். ஆனால் அவரது ராசியான எண் கொண்ட நாளில் பயணித்த (12.06 – 12 ஜூன்) போதும் அவர் இறந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாளும் 12, கிளம்பிய நேரமும் 12.10, அவர் அமர்ந்த சீட்டும் 12 – எல்லாம் அவரது 12 மோகம் தான் என்கிறார்களாம் நெருங்கியவர்கள். அவரது ‘1206 ராசி’ (கூட்டுத் தொகை 9) என்ற நம்பிக்கை அவரைக் காப்பாற்றவில்லையே! அவரது அதிர்ஷ்ட எண் துரதிர்ஷ்டமானது என்றால், மற்ற பயணிகளின் அதிர்ஷ்டங்கள் எல்லாம் என்ன ஆயின? கேட்கக் கேட்க ஆயிரம் கேள்விகள் எழும். பதில் தான் கிடைக்காது. காரணம் இவை எவற்றுக்கும் காரண காரிய அடிப்படையே இல்லை என்பது தான்.

ஜோதிடம் சார்! நம்புங்க… கேள்வி கேட்காதீங்க! பரபரப்புச் செய்தியைப் படிச்சுட்டு, கதையளந்துட்டு போங்க போதும் என்கிறார்கள் ஊடக வியாபாரிகள்.

– குப்பைக் கோழியார்   

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *