‘‘தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியாவே பெரியார் மண்ணாகும்!’’ ‘‘தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்கக் கனவு காணாதீர்!’’

viduthalai
6 Min Read

கோவை சூலூரைக் குலுக்கிய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு –
‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாக்கள்
சூலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூளுரை!

கோவை, ஜூன் 15, கோவை சூலூரில் நடைபெற்ற, ”சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” வில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா  கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முதலியோர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கழகக் கொடிகள், பதாகைகள் மயமான சூலூர்

கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக, ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு; “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்க கருத்தரங்கம்’ நேற்று (14.6.2025) மாலை 6 மணியளவில் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு கலங்கல் பாதையிலுள்ள எஸ்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கலங்கல் பாதை தொடக்கம் முதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கம் வரையிலும் சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடிகள்  பறக்கவிடப்பட்டும், ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த பதாகைகளும் நிகழ்ச்சிக்கு கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. கோவை மாவட்டத் தோழர்கள்  வாணவேடிக்கையுடன் கழகத் தலைவரை வரவேற்றதில் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வீறுகொண்டு எழச் செய்யும் கொள்கை முழக்கங்களுடன் கழகத் தலைவர் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

இவ்விழாவுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தலைமையேற்கும்படி முன்மொழியப்பட்டு வழி மொழியப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் “சுயமரியாதை இயக்கத்தின் இன்றைய தேவை”, சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் புலவர் செந்தலை ந.கவுதமன், “சுயமரியாதை இயக்க ஏடுகள்”, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, “சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி” ஆகிய தலைப்புகளிலும், நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, சூலூர் பேரூராட்சியின் முதல் பெண் தலைவர் தேவி மன்னவன், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவ மன்னன், தி.மு.க. நகரச் செயலாளர் உரம் கவுதமன்,  கழக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் தேவராஜ், தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்பரசு, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் குமரவேல், திருப்பூர் மாவட்ட ப.க.தலைவர் பல்லடம் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தும் உரையாற்றினர். நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்துச் சிறப்பித்தார்.

நூல்கள் வெளியிட்டு, பெரியார் உலகத்திற்கு
ரூ.5 லட்சம் வழங்குவதாக ஆ. இராசா எம்.பி. அறிவிப்பு

நிகழ்வில் கழகத் தலைவரால் தொகுக்கப்பட்ட “உலகத் தலைவர் பெரியார் தொகுதி –II”, “ஹிந்துத்வா வேரும் விஷமும்” ஆகிய இரண்டு புத்தகங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார். முதல் பிரதியை தி.மு.க. கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்களுடன் ‘திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் இதோ!’, ’பெரியார் ஒரு போர்க்கருவி’, ’ஜப்பானில் பெரியார்’, ‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு’: ஒரு முத்துக்குளியல்’ ஆகிய நான்கு புத்தகங்களும் சேர்த்து மொத்தம் ஆறு புத்தகங்கள் 850 ரூபாய் மதிப்புள்ளவை கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் ரூபாய் 600க்கு வழங்கப்பட்டன. ஏராளமான தோழர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் புத்தகங்களைப் பெற்றுச் சென்றனர். மாவட்டக் கழகத்தின் சார்பில் மேடையில் பங்கேற்ற தலைவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. சூலூர் பாவேந்தர் பேரவை சார்பாக புலவர் ந.செந்தலை கவுதமன் தலைமையில் தோழர்கள் ‘விடுதலை’க்கு சந்தா தொகை ரூபாய் 50,000/- தமிழர் தலைவரிடம் வழங்கி மகிழ்ந்தனர்.

பெண்களுக்குத் துணிச்சலைக் கொடுத்தது யார்?

நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார். அரங்கு நிறைந்திருந்த மக்கள் திரளில் முன் வரிசையில் ஏராளமான பெண்கள் அமர்ந்திருந்ததை உற்சாகத்துடன் சுட்டிக்காட்டி தனது உரையைத் தொடங்கினார். ‘‘ஸநாதனம் பெண்களை முக்காடு போட வைத்து மூலையில் தள்ளியது. சுயமரியாதை இயக்கம் பெண்களை படிக்க வைத்து இராணுவத் தளபதிகளாக்கியது” என்று எடுத்த எடுப்பிலேயே சுயமரியாதை இயக்கத்தின் சாதனையை ஆழமாக புரியவைத்தார். பெண்கள் உணர்ச்சிப் பெருக்குடன் பலமாக கைகளைத் தட்டினர்.  தான் பேசியதற்கு ஆதாரத்தைக் காட்ட பெண்களில் முதிர்ந்த வயதுடையோரை நோக்கி, ”அந்தக்காலத்தில் பெண்களின் நிலை இப்படித்தானே இருந்தது?” என்று கேள்வி கேட்டார். அவர்கள் அனிச்சையான தலையாட்டலின் மூலமாக ஆம் உண்மை என்று வெளிப்படுத்தினார்.  அன்றைக்கு இருந்த பெண்களின்  அவல நிலையையும் இன்றைக்கிருக்கும் பெண்களின் துணிச்சலையும் சுட்டிக்காட்டி, “இந்தத் துணிச்சலை கொடுத்தது தந்தை பெரியார் அல்லவா?, சுயமரியாதை இயக்கம் அல்லவா? கணவனை இழந்த பெண்கள் எப்படியெல்லாம் நடத்தப்பட்டனர்?  படாதபாடுபட்டு, பிள்ளைகளை ஆளாக்கி அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது, பெற்ற பிள்ளையின் திருமணத்திற்கான தாலியை தொட்டு வாழ்த்தக்கூட வாய்ப்பை வழங்காத நிலையில், அந்தத் தாயின் துயரத்தை துடைத்து, கைம்பெண் தன்மையே இல்லாத தலைகீழ் மாற்றத்தை உண்டாக்கியது சுயமரியாதை இயக்கம் தானே? தந்தை பெரியார் தானே?’’ என்று கேள்விகளிலேயே பதிலையும் புரிய வைத்தார்.  முத்தாய்ப்பாக, “இதையெல்லாம் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் செய்து காட்டியது சுயமரியாதை இயக்கம்” என்று முடித்தார். கை தட்டல்களால் அதிர்ந்தது அரங்கம்.

சுயமரியாதை இயக்கம்; ஆர்.எஸ்.எஸ். இயக்கம்
இரண்டில் எது வேண்டும்?

தொடர்ந்து தெற்கில் சுயமரியாதை இயக்கத்திற்கும், அதே காலத்தில் வடக்கில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை சுருக்கென தைக்கும்படி விளக்கிப் பேசிவிட்டு, ‘‘இரண்டில் எது வேண்டும் உங்களுக்கு” என்று மக்களின் முடிவுக்கே விட்டு விட்டார். மேலும் அவர் சமூக நீதி பற்றியும், செங்கல்பட்டு மாநாடு பற்றியும் அதில் நிறைவேற்றப்பட்ட புரட்சிகரமான தீர்மானங்கள் பற்றியும், புரட்சியாளர் அம்பேத்கர் நிறைவேற்றிட முடியாத பெண்களுக்கான சொத்துரிமையை (அதன் காரணமாக சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் அண்ணல் அம்பேத்கர்) திராவிடர் இயக்க ஆட்சியில் முதலமைச்சர் மானமிகு கலைஞர் நிறைவேற்றிக்காட்டியதையும், அதில் முத்தமிழறிஞர் கலைஞரின் பங்கு பற்றியும் விளக்கிப் பேசிவிட்டு, ”நூற்றாண்டு நிறைவு விழா காணும் சுயமரியாதை இயக்கத்தை; திராவிடர் இயக்கத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இறுதியாக திவ்ய வாசுகி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

தலைமை செயற்குழு உறுப்பினர் ஈரோடு த. சண்முகம், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, பெரியார் மருத்துவ குழுமத் தலைவர் மருத்துவர் இரா.கவுதமன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இராகுலன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தரும.வீரமணி, கழகத்தின் பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர் பரமசிவம், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, தாராபுரம் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், ஈரோடு மாவட்டத் தலைவர் இரா.நற்குணம், கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, நீலமலை மாவட்டத் தலைவர் மு.நாகேந்திரன், மாநில வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பாண்டியன், கோவை மாநகரத் தலைவர் தி.க.செந்தில்நாதன், கோவை மாநகரச் செயலாளர் புலியகுளம் க.வீரமணி, திருப்பூர் மாவட்டத் தலைவர் வேலு.இளங்கோவன்,  கோவை மாவட்டச் செயலாளர் ஆ.பிரபாகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோவை மாவட்டச் செயலாளர் சூ.செ.குமரவேல், மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர் கா.சு.ரெங்கசாமி, தாராபுரம் மாவட்டச் செயலாளர் ஜெ.தம்பி பிரபாகரன், பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர் அ.இரவிச்சந்திரன், தாராபுரம் மாவட்டக் காப்பாளர் கே.என்.புள்ளியான், ஈரோடு மாவட்ட காப்பாளர் சிவகிரி சண்முகம், திருப்பூர் மாவட்டச் செயலாளர் மு.நாச்சிமுத்து, கோவை மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவர் சூ.பெ.கருணாநிதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தும் – அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த, சாராத ஏராளமான பொதுமக்களும் அரங்கு நிறைந்து இடமில்லாமல் நின்று கொண்டு நிகழ்வை கண்டுகளிக்கும் வகையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *