மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் போட்டியின்றி தேர்வு

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 11- நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன் உள்ளிட்ட 4 பேரும், அதிமுக சார்பில் அய்.எஸ்.இன்ப துரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்ற நிலையில், அதிமுகவினரின் மனுக் களுக்கு எதிரான வா.புகழேந்தியி்ன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், 7 சுயேச்சை வேட்பாளர் களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

பதவிக்காலம் முடிவு

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. தொடர்ந்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில்

தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதனடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில், தனபால் மற்றும் அய்.எஸ்.இன்பதுரை ஆகியோரும் அறிவிக்கப்பட்டனர்.

மனுக்கள் ஏற்பும், நிராகரிப்பும்

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெற்றது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பத்மராஜன் உட்பட 7 சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று சட்டப்பேரவை செயலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவு இல்லாத காரணத்தால் சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா மற்றும் சிவலிங்கம் ஆகியோரது மனுக்கள் ஏற்கப்பட்டன.

இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் என பழனிசாமி வேட்புமனு தாக்கல் படிவங்களில் கையெழுத்திட்டிருப்பதால், அதிமுகவினரின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், அதிமுக வேட்பாளர்கள் இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.

போட்டியின்றித் தேர்வு

இதையடுத்து, திமுக வேட்பாளர்களான பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக வேட்பாளர்கள் அய்.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றித் தேர்வாகினர்.

வேட்புமனுக்களை நாளை (ஜூன் 12) மாலை 3 மணி வரை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் பின்னர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வாகியுள்ள திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *