முருகன் மாநாட்டைக் காணொலிமூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாரே?
முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர்!
ஆதரிக்கவேண்டியதை ஆதரிப்போம்;
கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்போம்!
சென்னை, மே 22 முருகன் மாநாட்டை காணொலிமூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாரே? என்ற கேள்விக்கு, முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றும், ஆதரிக்கவேண்டியதை ஆதரிப்போம்; கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
‘‘ஹலோ பண்பலைக்குத்’’
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி!
கடந்த 30.4.2025 அன்று ஹலோ பண்பலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டியளித்தார்.
அவரது பேட்டியின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
எந்த இயக்கத்தைச் சொல்வீர்கள்?
நெறியாளர்: பார்ப்பனர் அல்லாதார் சங்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று பல பிரிவுகள் வந்துவிட்டன. தாய்க்கழகத்தினுடைய தலைவராக, இந்தப் பிரிவுகளில் பெரியார் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், எந்த இயக்கத்தைச் சொல்வீர்கள்?
திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான்!
தமிழர் தலைவர்: ஒரு குழந்தையைக் கேட்டால்கூட சொல்லிவிடும். தி.மு.க.வில்தான் என்று! அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
ஏனென்றால், தி.மு.க. ஓர் அரசியல் இயக்கம். தி.மு.க. ஓர் ஆளுங் கட்சி. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைக்கக் கூடிய கட்சியுமாகும்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்று இதுவரையில் ஆறு தேர்தலைச் சந்தித்து மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.
‘‘எங்களுக்கு வழிகாட்டுவது
பெரியார் திடல்தான்!’’
பெரியார் திடல்தான்!’’
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார், ‘‘எங்களுக்கு வழிகாட்டுவது பெரியார் திடல்தான்’’ என்று! அதேபோல, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் உரையாற்றும்போது, ‘‘எங்கள் முடிவுகளை நிர்ணயிப்பவர் பெரியார்; எங்கள் பாதை பெரியார் பாதை’’ என்றார்.
அதேபோன்று, முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார், ‘‘எனக்கு வழிகாட்டுவது பெரியார் திடல். கீரிக்கும் – பாம்புக்கும் சண்டை நடந்தது முடிந்ததும், மூலிகைச் செடியில் விழுந்து புரளு மாம் கீரி. அதுபோல, என்னைக் கடிக்கும் இன எதிரிகளின் விஷம் தீர, பெரியார் திடலுக்குச் சென்று பெரியார் கொள்கை என்ற மூலிகையைத் தடவினால், அவ் விஷங்கள் முறிந்துவிடும்’’ என்றார்.
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்தார்!
அதேபோல, ‘‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமல் புதைத்துவிட்டேனே’’ என்று ஆதங்கப்பட்டார் முதலமைச்சர் கலைஞர்.
அந்த ஆதங்கத்தைப் போக்குகின்ற வகையில், மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்ற வுடன், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்தார்.
அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்துகொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
அதற்கடுத்துச் சொல்லவேண்டும் என்றால், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சொல்லலாம். திராவிட இயக்கத்தின் போர் வாளாகப் பயன்படுகிறார் வைகோ அவர்கள்.
தி.மு.க. – ம.தி.மு.க.தான்.
மற்றவர்களிடம் கட்சிப் பெயரில் ‘திராவிட’ இருக்கலாம்; பெயரில் ‘அண்ணா’ இருக்கலாம். ஆனால், நடைமுறையில் எதுவும் இல்லை.
‘திராவிட மாடல்’ அரசு 160 அடிக்கு மேல் முருகனுக்குச் சிலை எழுப்புவோம் என்று அறிவித்துள்ளதே!
நெறியாளர்: நீங்கள், தி.மு.க.வை இவ்வளவு சிலாகித்துப் பேசுகிறீர்கள்; ஆனால், கன்னியாகுமரியில், ஆர்.எஸ்.எஸ். அல்லது ஹிந்துத்துவா ஆகியோருடைய வீரியம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்போதுதான், 2000 ஆம் ஆண்டில், முதலமைச்சராக இருந்த கலைஞர், 133 அடியில் திருவள்ளுவர் சிலையை நிறுவினார்.
ஆனால், இப்போது இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மருதமலையில், 160 அடிக்கு மேல் முருகனுக்குச் சிலை எழுப்புவோம் என்று அறிவித்துள்ளதே!
இரண்டிற்கும் முரண்பாடு இருக்கிறதே, இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அதில் எங்களுக்கு உடன்பாடோ,
அதற்கு ஆதரவோ கிடையாது!
அதற்கு ஆதரவோ கிடையாது!
தமிழர் தலைவர்: இதைப் பொறுத்தவரையில், அத் துறை அமைச்சருடைய அதிக உற்சாகத்தைக் காட்டி யிருக்கிறதே தவிர, அதில் எங்களுக்கு உடன்பாடோ, அதற்கு ஆதரவோ கிடையாது.
நெறியாளர்: அதை நீங்கள் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறீர்களா?
ஆதரிக்கவேண்டியதை ஆதரிப்போம்; கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்போம்!
தமிழர் தலைவர்: ஆம்! ஆதரிக்கவேண்டியதை ஆதரிப்போம். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்போம். கொள்கை வழியில் செல்ல வேண்டும் என்று நினைப்போம்.
தவறுகளைச் சுட்டிக்காட்டவேண்டிய நேரத்தில், சுட்டிக் காட்டுவோம். அதேநேரத்தல், தட்டிக் கேட்கவேண்டிய நேரத்தில், தட்டிக் கேட்போம்.
அதற்குச் செவி சாய்க்கக்கூடிய அரசாகவும், இந்த அரசு இருக்கிறது; முதலமைச்சர் இருக்கிறார்.
இது அண்ணா, கலைஞர் காலத்திலிருந்து மிகப்பெரிய அளவிற்கு வந்த ஒரு பாரம்பரியம். அது இப்போதும் தொடர்கிறது!
நெறியாளர்: அண்ணாவை, தலைவர் கலைஞரை, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினைக் குறிப்பிட்டீர்கள். இந்தத் தலைமையைத் தவிர, மீதமிருக்கக்கூடிய அமைச்சர்கள் அனைவரும் பெரியார் கொள்கையைத் தாண்டி, ஹிந்துத்துவா பக்கம் சாயவேண்டியது ஒரு தேவை என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
தி.மு.க. என்பது ஜனநாயகக் கட்சி – கருத்துச் சுதந்திரத்திற்கு
அங்கு அனுமதி உண்டு
அங்கு அனுமதி உண்டு
தமிழர் தலைவர்: இல்லவே இல்லை. எல்லாக் கட்சியிலும் பல கருத்துள்ளவர்கள் இருப்பார்கள். தி.மு.க. என்பது ஜனநாயகக் கட்சி. கருத்துச் சுதந்திரத்திற்கு அங்கு அனுமதி உண்டு. கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்ற நிலைமை அங்கு உள்ளது.
உதயநிதி ஸ்டாலினின்
பாசறைப் பயிற்சி!
பாசறைப் பயிற்சி!
தி.மு.க. போன்ற அரசியல் கட்சியில், புதிதாகப் பல பேர் வருவார்கள். அதனால்தான், உதயநிதி ஸ்டாலின், ஒரு பாசறைப் பயிற்சியை நடத்தி, எல்லோருக்கும் கொள்கையைச் சொல்லிக் கொடுக்கிறார். அந்தப் பாசறையில், சில அமைச்சர்களும் சேரவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள்.
எல்லோரும் ஒரே பக்குவத்தில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இதில் எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய முதலமைச்சர்தான் மிகவும் முக்கியமாகக் கருதப்படவேண்டியவர்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் தெளிவாக இருக்கிறார்கள்!
முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார்; துணை முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார். மூத்த கொள்கை யாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களே சில நேரங்களில், சறுக்கினால்கூட, அதற்குரிய சரிவை அவர்கள் அடைந்து சிந்திக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.
முருகன் மாநாட்டை காணொலிமூலம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறாரே?
நெறியாளர்: முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்கள். இன்றைக்கும் அறிவுக்கு ஒவ்வாத விஷயங்கள் என்பதனாலேயே, தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்ல முடியாது என்று சொல்கிறீர்கள். ஆனால், முருகன் மாநாட்டை காணொலிமூலம் தொடங்கி வைத்தது நம்முடைய முதலமைச்சர்தான். அந்த மாநாட்டில், ஆன்மிக ரீதியான விஷயங்களை, அறநிலையத் துறையின்கீழ் வருகின்ற கல்லூரிகளில் பயிற்றுவிக்கப் போகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இது கல்வியைக் காவி மயமாக்கக் கூடிய விஷயம் என்று பகுத்தறிவாளர்கள், தி.மு.க.விற்கு ஆதரவாக இருக்கக்கூடியவர்கள், பா.ஜ.க. விற்கு எதிராக இருக்கக்கூடியவர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், முதலமைச்சர்தானே அதனைத் தொடங்கி வைத்தார்?
முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர்!
தமிழர் தலைவர்: முதலமைச்சருக்குச் சில கடமைகள் உண்டு. அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சிலவற்றை அவர் செய்துதான் ஆகவேண்டும். ஏனென்றால், முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர்.
முதலமைச்சருக்குக் கீழே ஓர் இலாகா இருக்கி றது. அந்த இலாகாவை, எப்படி திருத்த முடியுமோ, தேவையானபோது, அந்தத் திருத்தங்களை செய்வார். அதேநேரத்தில், எல்லாவற்றையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கு இல்லை. எல்லாவற்றையும், முதல மைச்சர் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்கிற அவசியம் அவருக்கும் இல்லை.
ஆனால், ஒரு கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு உள்ள ஒன்று.
அந்தக் கூட்டுப் பொறுப்பின் காரணமாக, கண்டிக்கவேண்டிய நேரத்தில் சிலவற்றைக் கண்டிப்பார்கள். பல நேரங்களில், விட்டுக் கொடுக்கவேண்டிய நேரத்தில், விட்டுக் கொடுப்பார்கள்.
சட்டப்பூர்வமாக அது நிற்குமா? நிற்காதா? என்பது பிறகுதான்.
சூப்பர் மார்க்கெட்டில், எல்லோரும், எல்லாவற்றையும் வாங்கித்தான் ஆகவேண்டும் என்பது கிடையாது!
ஆகவே, எங்களைப் பொறுத்தவரையில், ஓர் ஆட்சி என்பது சூப்பர் மார்க்கெட் போன்றது. அந்த சூப்பர் மார்க்கெட்டில், எல்லோரும், எல்லாவற்றையும் வாங்கித்தான் ஆகவேண்டும் என்பது கிடையாது. யாருக்கு என்ன வேண்டுமோ, அதனைத்தான் வாங்க முடியும், வாங்குவது அவரவர் தேவையைப் பொறுத்தது தான்.
எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதால், அந்த சூப்பர் மார்க்கெட்டில் சர்க்கரையை விற்கக்கூடாது என்று சொல்ல முடியாது.
‘காலனி’ என்ற வார்த்தை நீக்கம் நடைமுறையில் எந்த அளவிற்கு சாத்தியப்படும்?
நெறியாளர்: நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், ‘காலனி’ என்ற வார்த்தையை நீக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று நம்முடைய முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். நடைமுறையில் எந்த அளவிற்குச் இது சாத்தியப்படும்; என்ன விளைவுகளை, தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: சாத்தியமா? இல்லையா? என்கிற கேள்வியே கேட்கக்கூடாது. அரசாங்கம் சொன்னவுடன், நேற்றுமுதலே அது நடைமுறைக்கு வந்துவிட்டது.
அந்த வார்த்தையையே கொச்சைப்படுத்தி விட்டார்கள். ஆங்கிலத்தில், ‘காலனி’ என்றால், குடியி ருக்கும் இடத்தைக் குறிக்கும்.
ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. அந்த வார்த்தை நடைமுறையில் என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?
சில இடங்களுக்குக் காலனி என்ற சொல்கூட இணைந்தே இருக்கிறது. சி.அய்.டி. காலனி என்று கூட இருக்கிறது. அதிலிருந்து காலனியை எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை.
‘‘அவர்களெல்லாம் காலனி பீப்பிள்ஸ்’’ என்று அடையாளம் காட்டுவதுபோன்று ஒதுக்குகிறார்கள்.
தென்மாவட்டங்களில் கயிறு கட்டி ஜாதீய அடை யாளங்களைக் காட்டுவதுபோன்று, காலனியை அடை யாளம் காட்டுகிறார்கள். அதனால்தான், காலனி என்ற வார்த்தையை ஒழிக்கவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு போட்டிருக்கிறார்.
கலைஞரின், பெரியார் நினைவு சமத்துவபுரம்!
‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ என்ற திட்டத்தை, இந்தியாவிலேயே கலைஞர் முதன்முதலில் உருவாக்கி னார். அந்தத் திட்டத்தைத் தொடங்கி ஜாதியை ஒழித்துவிட்டாரே – அங்கே எல்லா ஜாதிக்காரர்களும் ஒன்றாக இருக்கிறார்களே!
தனித்து அடையாளம் காட்டவேண்டிய அவசியம் கிடையாது!
அதேபோன்றுதான், ‘காலனி’ என்ற வார்த்தையை ஒழிப்பதால், ஆதிதிராவிடர் என்று சொல்லக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களைத் தனித்து அடையாளம் காட்டுதல் கூடாது – எல்லா மக்களோடு அவர்களும் ஒன்றுதான்.
நீங்கள் அடையாளம் காட்டவேண்டுமானால், ஜாதி அடையாளம் காட்டவேண்டிய அவசியமில்லை. இதுதான் இந்த இயக்கத்தினுடைய அடிப்படைக் கொள்கையாகும்.
‘‘அரிஜனங்கள்’’, ‘‘தலித்’’ என்றாலும் குறிப்பிட்ட மக்களை அடையாளம் காட்டக்கூடியதுதானே?
நெறியாளர்: எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்றால், இதுபோன்ற விளிம்பு நிலை மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை காந்தியார் அவர்கள், ‘‘அரிஜனங்கள்’’ என்று அழைத்தார். ‘‘அரிஜனங்கள்’’ என்று சொன்னாலும், ஒரு குறிப்பிட்ட மக்களை அடையாளம் காட்டக்கூடியதுதான். அதற்குப் பிறகு ‘‘தலித்’’ என்று சொன்னாலும், குறிப்பிட்ட மக்களை அடையாளம் காட்டக்கூடியது. ஆக, இதுபோன்ற சொல்லாடல்கள் எல்லாமே, அந்தக் குறிப்பிட்ட மக்களை அடையாளம் காட்டக் கூடியதுதானே?
(தொடரும்)