செங்குன்றம், மே.15- சென்னை கொளத்தூரில் குழந்தை வரம் பெற்று தருவதாக கூறி வீட்டில் பரிகார பூஜை செய்து நகையை சுருட்டிய ஆசாமி சிக்கினார்.
அரசு மருத்துவமனை ஊழியர்
சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாள ராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஷாலினி (52). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் கீழக்கரை அழகுநேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (43) என்பவர் இவர்களுக்கு அறிமுகமாகி உள்ளார்.
நகை திருட்டு
அவர் குழந்தை பேறு பெறுவதற்கு வீட்டில் பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய ரவிச்சந்திரன் வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து சூர்யா பூஜைகளை செய்வது போல் நடித்து அவர்களிடமிருந்து 5 பவுன் நகைகளை வாங்கி ஒரு பாத்திரத்தில் போட்டுள்ளார்.
பின்னர் அவர்களிடம் நான் சென்ற பிறகு இதிலிருந்து நகையை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி விட்டு சென்றுள்ளார்.
அதைத்தொடர்ந்து சூர்யா சென்ற பின்னர், அந்த பாத்திரத்தை பார்த்தபோது நகைகளை திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ரவிச்சந்திரன் கொளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற சூர்யாவை கைது செய்தனர்.