பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் பேச்சு
சிதம்பரம், மே11- அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 135ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம் 5.5.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரு அமர்வுகளாக நடைபெற்றது.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ந.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன் இலக்கியத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்ற – பல்கலைக்கழக மொழிப்புல முதன்மையர், ஆட்சிக்குழு உறுப்பினர் அரங்க.பாரி தலைமையுரை நிகழ்த்தினார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக மேனாள் பதிவாளர் கு.வெ.பாலசுப் பிரமணியன் விழாப் பேருரையாற்றினார். ஒவ்வொரு பொழிவாளரும் பாரதிதாசனின் ஒவ்வொரு நூல்கள் குறித்துப் பேசினர்.
பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தன் உரையில், பாரதிதாசனின் பாண்டியன் பரிசு குறித்துப் பேசினார்.
தந்தை பெரியார் உரைநடையில் சொன்ன கருத்துக்களை பாரதிதாசன் கவிதை வடிவில் கூறியுள்ளார் என்றால் மிகையாகாது ஒரு நாணயத்திற்கு இண்டு பக்கங்கள் இருப்பது போல் – பாரதிதாசனுக்கு இரணடு பக்கங்கள் உண்டு. ஒன்று பகுத்தறிவு, மற்றொன்று தமிழ்மொழி உணர்வு ஆகும். மற்ற எந்த கவிஞர்களுக்குமில்லாத சிறப்பாக, “பாரதிதாசன் பரம்பரை” என்றொரு கவிதை எழுதும் கவிஞர் பட்டாளமும் உருவானது. கவிஞர் சுரதா, வாணிதாசன், பொன்னடியான், அப்துல் ரகுமான், அப்துல் காதர், குடியரசு, முடியரசன், கவிஞர் கலி.பூங்குன்றன் என கவிஞர்கள் பட்டாளமும் உருவாகி புரட்சிக் கவிஞருக்கு சிறப்பு சேர்க்கின்றனர். வேறு எந்தக் கவிஞர்களுக்கும் இதுபோன்ற வாரிசுகள் இல்லை.
பாரதிதாசன் எந்தக் காலத்திலும் பகுத்தறிவு கொள்கையில் சமரசம் செய்து கொண்டதில்லை, “இல்லையென்பவன் நானடா, தில்லையிலே கண்டுதானடா” என்று முழங்கியவர்.
1933ஆம் ஆண்டு சென்னையில் சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் “நான் ஒரு நிரந்தர நாத்திகன்” என்று பதிவு செய்தவர் ஆவார் என்று குறிப்பிட்டார்.
இறுதியாக மாலை 5 மணிக்கு பேராளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பதிவாளர் முனைவர் மு.பிரகாஷ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி முடிவில் பேராசிரியர் மு.இரவி நன்றி கூறினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன், பெரியார் படிப்பக துணைத் தலைவர் ஆறு.கலைச்செல்வன், ப.க. மாவட்ட செயலர் அ.செங்குட்டுவன், மாவட்ட துணைச் செயலர் ப.முருகன், மாவட்ட இளைஞரணி செயலர் மா.பஞ்சநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.