அ.தி.மு.க. – பி.ஜே.பி. என்பது தோல்வி கூட்டணி – ஊழல் கூட்டணி!

Viduthalai
3 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

சென்னை, ஏப்.13- அ.தி.மு.க. – பா.ஜனதா தோல்வி கூட்டணியே ஒரு ஊழல்தான். 2 ‘ரெய்டு’களுக்கு பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ் நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள் ளார்.

தோல்வி கூட்டணி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.4.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட் டணி என்பது தோல்வி கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்கு கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்வி கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதாக இல்லை. அ.தி.மு.க. – பா. ஜனதா கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவரது விருப்பம் சார்ந்தது.

ஆனால் எதற்காக இந்த கூட்டணியை உருவாக்கினார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று சொல்லவில்லை. மாறாக, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
‘நீட்’ தேர்வை, ஹிந்தி திணிப்பை, மும்மொழிக் கொள்கையை, வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக சொல்கிறது அ.தி.மு.க. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அ.தி.மு.க., இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை. அ.தி.மு.க. தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக தி.மு.க.வையும் தி.மு.க. அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்த பத்திரிகையாளர் சந்திப்பை பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் என்பதைப் பார்த்தவர்கள் அறிவார்கள்.

மணிப்பூர் அல்ல
மாநில உரிமை, மொழியுரிமை, தமிழ் பண்பாடு ஆகியவற்றை காப்பதற்காக களத்தில் நிற்கும் இயக்கம்தான் தி.மு.க. ஆனால் அதிகார வெறியோடு அமைக்கப்பட் டிருக்கும் பா.ஜனதா – அ.திமு.க கூட்டணி என்பது, அத்தனைக்கும் எதிரானது. பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை, நாட்டின் உரிமைகளை டில்லியிடம் அடமானம் வைத்து தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை.’நீட்’தேர்வைப் பற்றி ஊடகவியலாளர்கள் திரும்ப, திரும்ப கேள்வி எழுப்பியபோது அதற்கு சரியான பதிலை உள்துறை அமைச்சரால் சொல்லமுடியவில்லை.
உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர், ‘தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு’ என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது மணிப்பூர் அல்ல, தமிழ்நாடுதான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். அமைதியான மாநிலம் என்பதால்தான் அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது தமிழ்நாடு. இதனை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே ஒப்புக்கொள்கின்றன. ஆனால், சட்டம்-ஒழுங்கு மோசம் என்று உள்துறை அமைச்சர் பொறுப்பற்ற வகையில் பீதியைக் கிளப்பிச் சென்றிருக்கிறார்.

யார் ஊழல்வாதி?
அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் பேசிய காட்சியைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கவே செய்வார்கள்.ஊழலுக்காக 2 முறை முதலமைச்சர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல் என்பது?

இன்றைய அ.தி.மு.க. பொறுப்பாளர் களது உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் 2 சோதனைகள் நடத்தியதையும், அதில்இருந்து தப்பித்துக்கொள்ள பா.ஜனதா தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர் கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள்.
அ.தி.மு.க. – பா.ஜனதா கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ் நாட்டு மக்கள் அறிவார்கள். 2 ரெய்டுகள் நடந்தவுடன் அ.தி.மு.க.வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் பா.ஜனதா.தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோக கூட்டத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *