மதுரை, ஜூலை 8- விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய, மாவட்ட இலவச சட்ட உதவி மய்யத் தலைவர் தலைமையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பின்னணி மற்றும்
தனி நீதிபதி உத்தரவு
விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த சமுத்திரவள்ளி மற்றும் வேலுத்தாய் ஆகியோரின் கணவர்கள், சிவகாசி எட்டக்காபட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர்.
இதற்கு உரிய இழப்பீடு கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பட்டாசு ஆலைகளின் உரிமம், பாதுகாப்பு அலுவலர் நியமனம், தொடர் ஆய்வுகள், பாதுகாப்பு பயிற்சி மற்றும் வெடிபொருள் சட்டம், தொழிற்சாலை சட்டம் உள்ளிட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவது தொடர்பாக பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்.
அரசு தரப்பு மேல்முறையீடு
தனி நீதிபதியின் இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் அமர்வின்
புதிய உத்தரவு
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று (7.7.2026) நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கதையாகி வரும் பட்டாசு விபத்துகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்காக, மாவட்ட இலவச சட்ட உதவி மய்யத் தலைவர் தலைமையில், தொடர்புடைய அனைத்துத் துறைகளின் உயர் அதிகாரிகளையும் உள்ளடக்கிய சிறப்புக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டனர்.
இக்குழுவினர் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்தனர்.
