ரியாத், ஏப். 7- வரும் 14ஆம் தேதிக்கு பிறகு இந்தியா உள்பட மொத்தம் 14 நாடுகளுக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்தெந்த விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? 14 நாடுகளுக்கு மட்டும் இந்த விசா தடை ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சவூதி அரேபியா இஸ்லாமிய நாடாக உள்ளது. இஸ்லாமியர்களின் புனித இடமாகவும் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாடு மட்டுமின்றி பிற நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சவூதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.
ஹஜ் என்பது இஸ்லாமியர்களை பொறுத்தவரை அய்ம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ஹஜ் பயணத்தின்போது இஸ்லாமியர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு சென்று தொழுகை மேற்கொள்வார்கள்.
விசா கட்டுப்பாடு
தற்போது சவுதி அரேபியா விசா பயண கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளது. ஹஜ் பயணத்தையொட்டி இந்த பயண கட்டுப்பாடு என்பது நடை முறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் உள்பட மொத்தம் 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா என்பது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதாவது இந்த 14 நாடுகளில் இருந்து சவூதி அரேபியா செல்லும் மக்களுக்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை மட்டுமே விசா என்பது வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு உம்ரா விசா, பிசினஸ் விசா, குடும்பத்தினருக்கான விசா உள்ளிட்டவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இந்த விசா நிறுத்தம் என்பது ஹஜ் புனித பயணம் முடிவடையும் ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பலரும் ஹஜ் பயணத்தை முறைப்படி பதிவு செய்யாமல் சவூதி அரேபியாவுக்குள் நுழை கின்றனர். அதன்பிறகு அவர்கள் சட்டவிரோதமாக தங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை தடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மொத்தம் 1000க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இந்த முறை நடக்க கூடாது என்பதில் சவூதி அரேபியா உறுதியாக உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வரும் 14ஆம் தேதிக்கு பிறகு சவூதி அரேபியாவுக்கு உம்ரா விசா, பிசினஸ் விசா, குடும் பத்தினருக்கான விசா உள்ளிட்டவை ரத்து செய்யப்பட உள்ளதாக தக வல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தற்போது ஹஜ் பயணத்துக்கான டிஜிட்டல் வழிக்காட்டி என்பது 16 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் எளிதாக ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். இருப்பினும் சவுதி அரேபியாவின் இந்த முடிவால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் வரும் 14ஆம் தேதிக்கு பிறகு பாதிக்கப்பட உள்ளனர்.