சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி தகவல்
சென்னை, மார்ச் 26 தமிழ்நாட்டில் 2018 முதல் தற்போது வரை 12 ஆயிரத்து 114 சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில் விவரம் வருமாறு:
அமைச்சர் செந்தில்பாலாஜி
‘‘தமிழ்நாட்டில் மின் இணைப்புக் கேட்டு விண்ண பித்த விவசாயிகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள வர்களுக்கு சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மின் இணைப்புகள் வழங்கப்படும்.”
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தனியார் வேளாண் கல்லூரி அமைக்க அனுமதி அளிக்கும் திட்டம் உள்ளதா? என உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
“தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, இதுவரை 72,664 மாணவர்கள் பயின்று பட்டம் பெற்றுள்ளனர். இதன்வழி, ஆண்டுதோறும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மாணவர்கள், வேளாண்மை படிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இங்கு படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாகை கீழ்வேளூர் வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது.கல்லூரிக்கு கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது” என்று அமைச்சர் பதிலளித்தார்.
அமைச்சர் எ.வ.வேலு
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு முக்கி யத்துவம் தர வேண்டும் என்ற நோக்குடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வரு கிறார்கள். அதன்படி, தென் மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. நெல்லை புறவழிச்சாலை திட்டத்திற்கு முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து, இரண்டாம் கட்ட பணிக்காக நில எடுப்பு வேலைகளும் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகள் நடைபெறும்.
அமைச்சர் கே.என்.நேரு
நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள ஏரியை சுத்தம் செய்ய, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் திருச்செங்கோடு ஏரி சுத்தம் செய்யப்படும்.
அமைச்சர் மூர்த்தி
“தமிழ்நாட்டில், 2018 முதல் தற்போது வரை 12 ஆயிரத்து114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணம் குறித்து அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது!”
இவ்வாறு அமைச்சர்கள் பதிலளித்தனர்.