பாசிச சூழ்ச்சியை
வீழ்த்துவோம் : உதயநிதி
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில், தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு துடிப்பதாக அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார். இந்த சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று வீழ்த்த வேண்டும். இந்த தீங்கு குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வது நமது கடமை. நமது உரிமைகளை பாது காக்க கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை பின்பற்றும் பீகார்
தமிழ்நாட்டு நலத்திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடிப்பது வழக்கமாகிவிட்டது. பீகார் அரசின் நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கான பிங்க் பேருந்து, வேலை செய்யும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், அரசுப் போக்குவரத்து கழக வேலைகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு என பெண்களை மய்யப்படுத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகையும் ரூ.1000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தால் உயர்ந்த தமிழர்கள் சந்திரபாபு நாயுடு
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு கூறி வரும் நிலையில், தமிழர்கள் பற்றி ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பேசிய காட்சிப் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆங்கிலத்தை நன்றாக கற்றதால்தான், அமெரிக்கா போன்ற நாடுகளில் உயரிய பதவிகளில் தமிழர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், எந்த நாட்டுக்கு போனாலும் அங்கு முக்கிய பதவிகளில் தமிழர்களை காண முடிவதாகவும் அவர் பாராட்டினார்.
செவ்வாயில் நீர் இருக்கிறதா?
நாசா புதிய வீடியோ
செவ்வாய் கோள் எப்படி இருக்கும். மணல் மேடுகளாக இருக்குமா? தண்ணீர் இருக்குமா? என பல கேள்விகள் நம்மிடையே எழும். அதற்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் நாசாவின் ரோவர் விரிவான வீடியோவை எடுத்து அனுப்பியுள்ளது. குன்றுகள் நிறைந்திருப்பது போல செவ்வாய் கோளின் தோற்றம் தெரிகிறது. பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் 30 கிமீ தூரம் வரை தெரிகிறது. ஆனால், தண்ணீர் மட்டும் தென்படவில்லை.