நாசா, மார்ச் 7 கடந்த ஆண்டு முதல் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், பூமிக்கு திரும்புவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் போயிங் தயாரித்த ஸ்டார்லைனர் பரிசோதனை விண்கலத்தில் கடந்த ஜூன் மாதம் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் பன்னாட்டு விண்வெளி மய்யத்தில் எட்டு நாட்கள் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இரு விண்வெளி வீரர் களும் பூமிக்குத் திரும்புவது குறித்து செய்தியாளர்களிடம் பேசினர். நாசாவின் மற்றொரு விண்வெளி வீரரான நிக் ஹாகும் இந்த சந்திப்பில் இணைந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர்.
விண்வெளி நிலைய செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய தருணங்கள்
முன்னதாகவே வீடு திரும்ப விரும்புகிறீர்களா என்று அவர்களிடம் கேட்டதற்கு, குறுகிய காலத்திற்கு மட்டுமே திட்டமிட்டிருந்தாலும், நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகவே வந்ததாக புட்ச் வில்மோர் கூறினார்.
மேலும் மனித விண்வெளி பயணம் “எதிர்பாராத சூழ்நிலைகளுக்கான திட்டமிடலை அடிப்படையாக கொண்டது” என்றும் அவர் தெரிவித்தார்.
கீழே உள்ள குடும்பங்களுக்கு இது ஒரு “ரோலர்கோஸ்டர்” அனுபவமாக இருந்ததாகவும், ஏனெனில் தாங்கள் எப்போது திரும்பி வருவோம் என்பது அவர்களுக்கு தெரியாது, இதுதான் கடினமான பகுதி என்றும் கூறினார் சுனிதா வில்லியம்ஸ்.
முரண்பாடுகளைக் கையாள்வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாகும், மேலும் இது எதிர்கால பயணங்களை எளிதாக்கும் என்று நம்புகிறோம் என்றும் விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர்.