பாட்னா, மார்ச் 2 15 ஆண்டு பழைய வாகனங்களை அகற்றுவதை போன்று, 20 ஆண்டிற்கும் மேலாக பீகார் மக்களுக்கு சுமையாகி வரும் என்.டி.ஏ. கூட்டணியை அகற்ற வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான 20 ஆண்டு என்.டி.ஏ. அரசு, தற்போது மோசமான வாகனமாக மாறிவிட்டது. பீகாரில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் அதிக அளவில் மாசுவை வெளியிடும் 15 ஆண்டிற்கும் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், 20 ஆண்டிற்கும் மேலாக மோசமான என்.டி.ஏ. அரசை ஏன் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்?. இந்த அரசு பீகார் மக்களுக்கு சுமையாகிவிட்டது. இது கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.
20 ஆண்டிற்கு மேலாக நிதிஷ் குமார் தலைமையி லான அரசு மோசமான மாசு என்ற வறுமை, வேலைவாய்ப்புயின்மை, ஊழல், குற்றம், ஊடுருவல் ஆகியவற்றை பரப்பிவிட்டுள்ளது.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு….
தெலங்கானா போர்க் கொடி!
அமித்ஷா உறுதி அளித்ததில் சந்தேகம்
அய்தராபாத், மார்ச் 2 மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களில் எல்லை நிர்ணயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளில் 8 இடங்கள் குறையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் இதுகுறித்து விவாதிக்க வருகிற 5-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை அவர் கூட்டிள்ளார்.
அதற்கு பதில் கொடுக்கும் விதமாக கோவையில் பேசிய அமித்ஷா தென் மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறையாது என உறுதி அளித்தார்.
இந்த கருத்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக தெலங்கானாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இது குறித்து கூறுகையில்:-
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை ஒடுக்க ஒரு முயற்சி நடக்கிறது. இது ஜனநாயகத்தை சேதப்படுத்தும்.
இதனை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமராவ் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1980-களில் தென்னிந்திய மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றி மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தின.
மக்கள் தொகை குறைந்து வருவதால் நாடாளுமன்றத்தில் உங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கிறேன் என்று சொல்வது நீதியை கேலி செய்வதாகும். தேசத்திற்கு நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயத்தை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊருக்குத்தான் உபதேசம்! உ.பி.யில் மதுபான விற்பனை கடைக்கு குவிந்த 3.65 லட்சம் விண்ணப்பங்கள்
லக்னோ, மார்ச் 2 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்நாடு, வெளிநாடு மதுபானங்கள் சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகை சில்லறைக் கடைகள் திறப்பதற்கு உரிமம் பெற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உ.பி. மாநில அரசின் கலால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பிக்க நேற்று (1.3.2025) கடைசி நாள் எனக் கூறப்பட்ட நிலையில், நாளை (3.3.2025) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கட்டணமாக 1987.19 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 6-ஆம் தேதி குலுக்கல் மூலம் விண்ணப்பித்தவர் களுக்கு கடைகள் ஒதுக்கப்படும் எனத் கலால்துறை ஆணையர் ஆதர்ஷ் சிங் தெரிவித்துள்ளார். மொத்தம் 27,308 கடைகள் ஒதுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.