சட்டப் பல்கலை. வளாகத்தில் சுற்றுச்சூழல் வகுப்பறை மரங்களுக்கு இடையே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு

viduthalai
3 Min Read

சென்னை, பிப்.20 சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் மரங்களுக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சார்ந்த கல்வியையும், சட்டக் கோட்பாடுகளையும் இயற்கை சூழலில் கற்பிக்கும் வகையில் சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் மியாவாக்கி காடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமாரின் கனவு திட்டத்தை செயல்படுத்தும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சட்டம், சட்ட ஒழுங்கு துறை மற்றும் ஈகோ கிளப் மாணவர்கள் இணைந்து விதைகளை தூவினர். தற்போது அந்த விதைகள் மரமாக வளர்ந்து, பசுமைப் பரப்பாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், பசுமைப் பரப்புக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நடைமுறையை துணைவேந்தர் சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார். அவர், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் அதன் நடைமுறை அமலாக்கங்கள் பற்றிய விரிவான விளக்கங்களை வழங்கினார்.
நிகழ்வில், சுற்றுச்சூழல் சட்டத் துறையின் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஆர். ஹரிதா தேவி, உதவிப் பேராசிரியர்கள் ஸ்டான்லி, நவீன், கதிரவன் மற்றும் ஈகோ கிளப் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்கள் சண்டையிடவில்லை
சுமூகமாகவே இருக்கிறார்கள்
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகள் தள்ளுபடி
உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.20 திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அத்துடன், “திருப்பரங்குன்றத்தில் மக்கள் யாரும் சண்டையிடவில்லை. ஆனால், நீங்கள் மக்களை சண்டை போட வைத்துவிடுவீர்கள்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி சார்பில் பிப்.4-இல் மலையை காக்கும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரையில் 144 தடையாணை பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணியைச் சேர்ந்த சுந்தரவடிவேல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்லும் வாகனங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நிலுவையில் இருந்த இரு மனுக்களும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.சிறீமதி அமர்வில் நேற்று (பிப்.19) விசாரணைக்கு வந்தது.

வழக்குகள் தள்ளுபடி

மனுதாரர்கள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை இரு தரப்பினரும் உரிமை கோரி வருவதால் மலையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “திருப்பரங்குன்றத்தில் மக்கள் யாரும் சண்டையிடவில்லை. ஆனால், நீங்கள் மக்களை சண்டை போட வைத்துவிடுவீர்கள்” என கருத்து தெரிவித்தனர்.

இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில், “கோயில் வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிரதான மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளது. மனுதாரர்கள் உச்ச நீதிமன்றம்தான் செல்ல வேண்டும்” எனக் கூறப்பட்டது. அரசு தரப்பில், “மனுதாரர்கள் ஜனவரி 29-இல் மனு அளித்துவிட்டு, அடுத்த 3 நாளில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாளைமுதல் வெப்பநிலை
4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

சென்னை, பிப்.20 தமிழ்நாட்டில் நாளை (பிப்.21) முதல் பிப்.23-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இன்று(பிப்.20) காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *