சென்னை,பிப்.19- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பொருட்களின் விலை தற்காலிகமாக உயரும் வாய்ப்புகள் இருப்பதாக சோஹோ நிறுவனர் சிறீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் வரி விதிப்பு காரணமாக பின்வரும் மாற்றங்கள் ஏற்படும் என்று சோஹோ நிறுவனர் சிறீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அதன்படி நாம் அமெரிக்காவிற்கு மென்பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்கிறோம். சீனாவில் இருந்து சரக்கு பொருட்களை இறக்குமதி செய்கிறோம். இப்போது அமெரிக்காவின் வரி விதிப்பால்.. இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை சமப்படுத்த அமெரிக்காவிலிருந்து அதிக அய்போன்கள், ஜிபியுக்கள், எல்பிஜி, அணுமின் நிலைய சேவைகள், போர் விமானங்கள், விஸ்கி போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அதே சமயம் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்காமல் இருக்க, சீனாவில் இருந்து நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்வதை குறைப்பதற்கான வழிகளை இந்தியா கண்டுபிடிக்க வேண்டும், அதாவது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது ஒரே இரவில் நடக்க முடியாது என்பதால், குறுகிய காலத்தில் இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயரக்கூடும். இது பணவீக்கமாக உருவெடுக்கும், என்று சோஹோ நிறுவனர் சிறீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.