மும்பை, பிப்.12 ‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசிய காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு கடும் எதிா்ப்பைச் சந்தித்துள்ளது. காட்சிப் பதிவில் அவா் பேசியுள்ளதாவது:
ராம்ஜி சக்பால் என்ற சாமானிய மனிதரின் குடும்பத்தில் அம்பேத்கா் பிறந்தாா். பின்னா் அவா் ஆசிரியா் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு, ஆசிரியரின் பெயரான அம்பேத்கா் என்ற பெயரை தானும் பெற்றாா். தனது அறிவை வளா்த்துக் கொள்ளும் திறமையுள்ள அனைவரும் பிராமணா்கள்தான் என்று வேதம் கூறுகிறதாம். அந்த வகையில் அம்பேத்கரும் பிராமணா்தானாம். ஏனெனில், அவா் தனது அறிவை வளா்த்துக் கொண்டாா்’ என்று பேசியுள்ளாா்.
ராகுலின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் எதிா்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர அவாத் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நடிகா் ராகுல் அனைத்து எல்லைகளையும் மீறி பேசியுள்ளாா். இதுபோன்ற நபா்கள் தொடா்ந்து ஜாதியவாதத்தை வளா்ப்பவா்களாக உள்ளனா். நாட்டையும், மகாராட்டிர மாநிலத்தையும் இவா்கள் கெடுத்து வருகின்றனா்’ என்று கூறியுள்ளாா்.
இந்த சா்ச்சையை அடுத்து நடிகா் ராகுல் மன்னிப்பு கேட்டுள்ளாா்.
அதில், ‘சத்ரபதி சிவாஜி, அம்பேத்கா் குறித்து பல இடங்களில் பேசியுள்ளேன். ஆனால், இப்போது திடீரென ஒரு காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பரவி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான் தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி தேசத் தலைவா்கள் குறித்துப் பேசும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று கூறியுள்ளாா்.
முன்னதாக, ‘மராத்திய மன்னா் சிவாஜி, முகலாயா் பிடியில் இருந்து கூடையில் மறைந்து தப்பியதாக கூறப்படுவது தவறு; அவா் முகலாய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதன் மூலமே சிறையிலிருந்து தப்பினாா்’ என்று பேசியது மகாராட்டிரத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டில்லி சட்டப் பேரவைக்கு கிரிமினல் வழக்குகள் உள்ள 31 பேர் தேர்வு
புதுடில்லி, பிப். 12 டில்லி சட்டப் பேரவைக்குத் தேர்வானவர்களில் 31 எம்எல்ஏக்கள் மீது குற்றப்பின்னணி வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ஏடிஆர்) ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் டில்லி சட்டப் பேரவைக்குத் தேர்வானவர்களில் மொத்தம் 31 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
தேர்தலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வெற்றி பெற்றவர்களில் 43 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது 2025-ல் தேர்வானவர்களில் 17 புதிய எம்எல்ஏக்கள் மீது கடுமையான பிரிவில் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு போன்றவை அவர்கள் மீது பதிவாகியுள்ளன.
பாஜக சார்பில் தேர்வாகியுள்ள 48 பேரில் 16 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஆம் ஆத்மி சார்பில் தேர்வான 22 பேரில் 15 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
7 எம்எல்ஏக்கள் மீதும், 10 எம்எல்ஏக்கள் மீதும் கடும் குற்றப்பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.
சொத்து மதிப்பு
புதிதாக தேர்வான 70 எம்எல்ஏக்களுக்கு மொத்தமாக ரூ.1,542 கோடி சொத்து உள்ளது. எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22.04 கோடியாக உள்ளது.
பாஜக எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.28.59 கோடியாகவும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.74 கோடியாகவும் உள்ளது. 3 பாஜக எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.115 கோடி முதல் ரூ.259 கோடியாக உளளது. அதே நேரத்தில் 3 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ கர்னைல் சிங் அதிகபட்சமாக ரூ.259.67 கோடி சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். அதற்கு அடுத்தபடியாக பாஜக எம்எல்ஏக்கள் மன்ஜிந்தர் சிங் சிர்சாவுக்கு ரூ.248.85 கோடியும், வர்மாவுக்கு ரூ.115.63 கோடியும் சொத்துகள் உள்ளன.
தேர்வான புதிய எம்எல்ஏக்களில் 64 சதவீதம் பேர் பட்டதாரிகளாகவும், 33 சதவீதம் பேர் 5 முதல் 12-ஆம் வகுப்புப் படித்தவர்களாகவும் உள்ளனர். தேர்வான 70 பேரில் 5 பேர் மட்டுமே பெண் எம்எல்ஏக்கள் ஆவர். கடந்த 2020-இல் 8 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் ஏடிஆர் தெரிவித்துள்ளது.