சென்னை,பிப்.5- மாணவர்களுக்கு காலநிலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ ஏற்படுத்தப் படும் என்று காலநிலை உச்சி மாநாடு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார்.
காலநிலை உச்சி மாநாடு
சென்னை, நந்தம் பாக்கம், வர்த்தக மய்யத்தில் சுற்றுச் சூழல் துறை சார்பில், ‘தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0′ நேற்று (4.2.2025) தொடங்கியது. இம்மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:
காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் வகையில், நம்மை தகவமைத்துக் கொள்ள விவாதங்களை முன்னெடுப்பதற்கான தளமாக இந்த மாநாட்டை நாம் நடத்திக்கொண்டு வருகிறோம்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய விளைவுகளையும், பேரிடர்களையும் எதிர் கொள்ள வேண்டும் என்றால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் காலநிலை மாற்றம் என்றால் என்ன? அதன் விளைவுகள், அதை எப்படி எதிர் கொள்வது? அதற்கேற்றபடி, நம்மை எப்படி தகவமைத்துக் கொள்வது? என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காலநிலை மாற்றத்தை கல்வித் துறை மூலமாகவே புகட்ட அரசு திட்டமிட் டுள்ளது. மேலும், கால நிலை கல்வியறிவை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது.
சூழல் மன்றங்கள்
எனவே, தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் ‘சூழல் மன்றங்கள்’ ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கு என்று ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வகுத்து அறிவிக்க இருக்கிறது.
அவசியமான கால நிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலமே அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க இருக்கிறோம்.
பசுமைத் தொழில் நுட்பங்கள் மூலமாக பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தக் கூடிய சமூகமாகவும், உலகளாவிய கால நிலைக் குறிக்கோள்களை அடைய உறுதுணையாக இருக்கும் சமூகமாகவும் எதிர்காலத்தில் நாம் திகழவேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மாநாட்டில், மாசுக் கட்டுப் பாட்டு வாரியத்தின் இணைய வழி கழிவு பரிமாற்ற மய்யம், தொழிற்சாலைகளின் பசுமை மதிப்பீடுக்கான இணைய தளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அத்துடன், சுற்றுச் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கான விருதுகளை வழங்கினார். மேலும், ‘கால நிலைக்கு ஏற்ற வாழ்க்கை முறை’ என்ற ஆவணத்தையும் வெளியிட்டார்.