இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிந்தைய முதல் கும்பமேளா அலகாபாதில் (பிரயாக்ராஜ்) 1954இல் நடைபெற்றது. அப்போதும் மவுனி அமாவாசை நாளன்று பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் திரிவேணி சங்கமம் பகுதியில் குவிந்தனர்.
அந்தத் தருணத்தில் யானை ஒன்று ஓடியதால், பக்தர்கள் அங்குமிங்கும் சிதறினர். இதில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்தமாக 800 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு, முக்கிய விருந்தினர்கள் யாரும் இதுபோன்ற நிகழ்வுகளுக்குச் செல்லக்கூடாது என அப்போதைய பிரதமர் நேரு அறிவுறுத்தினார்.
கடந்த 1986ஆம் ஆண்டு அரித்துவாரில் கும்பமேளா நடைபெற்றது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அப்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சர், வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அரித்துவாருக்குச் சென்றார். இதனால், பக்தர்கள் சில ஆற்றங்கரைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டது.
இதனால், பிற இடங்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல 1992இல் உஜ்ஜயினி நகரில் நடந்த சிம்ஹஸ்தா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு நாசிக்கில் நடந்த கும்பமேளாவிலும் நெரிசல் ஏற்பட்டுப் பலர் உயிரிழந்தனர். ‘தைனிக் ஜாகரன்’ வெளியிட்ட செய்திகளின்படி, அந்தத் தருணத்தில் துறவிகள் சிலர் வெள்ளிக் காசுகளைப் பரிசளித்துள்ளனர். அதனைப் பெற எல்லோரும் முண்டி யடித்ததில் 30 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த 2010இல் அரித்துவாரில் நடந்த கும்பமேளாவில் ‘ஷாஹி ஸ்நான்’ நாளன்று அங்கிருந்த சாதுக்கள் சிலருக்கும் பக்தர்கள் சிலருக்கும், இடையில் நடைபெற்ற மோதலில் அய்ந்து பேர் உயிரிழந்தனர்.
அலகாபாதில் (பிரயாக்ராஜ்) 2013ஆம் ஆண்டு கும்பமேளா நடந்த தருணத்தில் ரயில் நிலையத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் குவிந்தனர். அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதில் 29 பேர் பெண்கள். இவ்வாண்டு 30 பேர் மாண்டதாகத் தகவல்!
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி ஆந்திராவின் திருப்பதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் பலியானார்கள். 48 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பதியில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி தரிசனம் 2025 – ஜனவரி 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்வைப் பார்க்க விரும்பும் பக்தர்களுக்கு அனுமதி சீட்டுகள் (டோக்கன்கள்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 94 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.ஜனவரி 9ஆம் தேதி காலை அய்ந்து மணியில் இருந்து இவை வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், முந்நாள் (8.1.2025) காலையிலிருந்தே இதனைப் பெற ஆயிரக்கணக்கானவர்கள் குவிய ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் திருப்பதியில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணி மற்றும் பைராகிபெட்டாவில் அமைந்துள்ள விஷ்ணு நிவாசம் கேந்திராஸ் ஆகிய இடங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவைப் பார்க்க வந்தவர்களில் பலர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஏழாக இருந்தது.
அக்கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரின் சிலை கோவில் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்படும். அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து பக்தர்களின் வழிபாட்டிற்காக அத்திவரதரின் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது.
ஜூலை 18ஆம் தேதி கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் சிக்கி காவலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அன்றைய நாளில் மட்டும் நான்கு பேர் பலியாயினர். இந்த நிகழ்வுக்கு முன்பு இருவர், இதற்குப் பின் ஒருவர் என மொத்தமாக 7 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2011ஆம் ஆண்டில் சபரிமலையில் ஏற்பட்ட ஒரு விபத்தில் 102 பேர் உயிரிழந்தனர்.
கும்பகோணத்தில்12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம், 1992ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெரிசல் ஏற்பட்டு, சுமார் 50 பேர் வரை உயிரிழந்தனர்.
மத விழாக்கள் என்ற பெயரிலும், கடவுள் கடாட்சம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையிலும் மக்கள் இப்படிப் பரிதாபகரமான முறையில் பலியாவதை பகுத்தறிவு, இரக்கம் உள்ள மனிதர்களால் எப்படி ஏற்க முடியும்?
மதச் சடங்குதான் பக்தியா? அதில் மரணம் அடைவதுதான் புத்தியா? சிந்திப்பீர்!