முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் 10ஆம் தேதி நடக்கிறது பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது

viduthalai
1 Min Read

சென்னை,பிப்.4- தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு இதில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

அமைச்சரவைக் கூட்டம்

ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11ஆம் தேதி பதில் அளித்தார்.
மொத்தம் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைக்கப்படுவதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் 10ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். சட்டப்பேரவையில் வரும் 2025-2026ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதுதொடர்பாகவும், அதில் இடம்பெறும் அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் தரப்படும். மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *