மியான்மா, பிப். 1- மியான்மரில் தொடர்ந்து 7ஆவது முறையாக ராணுவ அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது 2023, ஆகஸ்டு மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் உறுதியளித்தது. தொடர்ந்து அவசர நிலையை நீட்டித்து வருவதால் பொதுத்தேர்த லையும் ஒத்தி வைத்தது. இந்நிலையில், மியான்மர் நாட்டில் மேலும் 6 மாத காலத்துக்கு அவசர நிலை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 5 ஆண்டாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விசா காலம் முடிந்த பிறகும்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள 7 ஆயிரம் இந்திய மாணவர்கள்
வாசிங்டன், பிப். 1- அமெரிக்காவில் 7,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற கல்வி மய்யத்தை சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் கூறியதாவது: அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்கப்படுகிறது. இதேபோல கல்வி சுற்றுலா வரும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்கப்படுகிறது.
இந்தியா, சீனா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதில் மிக அதிக பட்சமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர். எச்1பி விசா பெற்றும் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரும் விசா காலம் முடிந்த பிறகும் இங்கேயே தங்கி உள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஜெசிகா எம்.வேகன் தெரிவித்துள்ளார்.