வழக்கு விசாரணையில் சீமான், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

viduthalai
1 Min Read

சென்னை, ஜன.23 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப் பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தமக்கு எதிரான பிடியாணையை ரத்து செய்ய சீமான் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகார்

2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இனத் துரோகி, தேசத் துரோகி என பேசி, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, பிடியாணையை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது எனவும் கூறி, சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *