புதுடில்லி, ஜன.21-வரவிருக்கும் டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி அரசுக்கும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கும் இடையேயான மேலாதிக்கப் போரில் தலைநகரில் உள்ள மக்கள் அவதிப்படுவதாகக் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்தார்.
சிறந்த தேர்வு
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விழிப்பாக உள்ளனர். இந்த முறை டில்லி மக்கள் ஏமாறமாட்டார்கள் காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். டில்லி அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே போர் நிலவி வருகிறது. இதில் மக்கள்தான் அவதிப்படுகிறார்கள்.
மக்களின் சிறந்த தேர்வாக காங்கிரஸ் கட்சி உருவெடுத்துள்ளது. டில்லி பேரவைத் தேர்தலில் மக்கள் அதற்கான ஆணை வழங்குவார்கள். டில்லி மக்களுக்கு நாங்கள் சில உத்தரவாதங்களை அளித்துள்ளோம்.
இலவச எரிவாயு உருளை
ஷீலா தீட்சித் தலைமை யிலான காங்கிரஸ் ஆட்சியில் நடந்த வளர்ச்சியையும் மக்கள் நினைவு கூர்கின்றனர். நாங்கள் வலுவாக போராடுவோம், டில்லி தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்படும் என்று ராஜஸ்தானின் மேனாள் துணை முதலமைச்சர் கூறினார்.
ரூ.500-க்கு சமையல் எரிவாயு உருளை, இலவச உணவுப் பொருட்கள், 300 யூனிட் வரை மின்சாரம், பியாரி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 மானியம், ரூ.25 லட்சத்துக்கு இலவச மருத்துவக் காப்பீடு, படித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ஒரு ஆண்டுக்கு மாதம் ரூ.8,500 ஆகிய 5 உத்தரவாதங்களைக் காங்கிரஸ் அளித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து மக்கள வைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு எதிராகப் போராடியதாகவும், அதன் விளைவு நன்றாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டப் பேரவைக்குப் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, பிப்ரவரி 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
2015 மற்றும் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டில்லி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி முறையே 67 மற்றும் 62 இடங்களில் வெற்றி பெற்றது. 2015இல் மூன்று இடங்களிலும், 2020இல் 8 இடங்களிலும் பாஜக வென்றது, காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.