பகுத்தறிவாளர் மாநாடு நிறைவு-பொதுக்கூட்டத்தில் இனமுரசு சத்யராஜ்
திருச்சி, ஜன.19 சமூக மகிழ்ச்சிக்கும், தனி மனித மகிழ்ச்சிக்கும் வித்திடுவது – தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைக் கொள்கையும், பகுத்தறிவு சிந்தனையும், எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத வாழ்க்கைதான் என்றார் ‘இனமுரசு’ சத்யராஜ்.
‘இனமுரசு’ சத்யராஜ் உரை
கடந்த 29.12.2024 அன்று மாலை திருச்சி புத்தூர் நான்கு சாலை அருகே இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டின் நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், ‘இனமுரசு’ சத்யராஜ் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அதற்கு என்னுடைய மகிழ்ச்சி யையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘‘பெரியாரை உலக மயமாக்குவோம் – உலகை பெரியார் மயமாக்குவோம்!’’
‘‘பெரியாரை உலக மயமாக்குவோம் – உலகை பெரியார் மயமாக்குவோம்” என்ற முழக்கத்தோடு நான் இந்த நிகழ்வில் உரையாற்ற விழைகிறேன்.
முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு என் உரையைத் தொடங்குகிறேன். அவருக்கு மட்டுமல்ல, கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கும் என்னுடைய வணக்கம், நன்றிகள்!
ஏனென்றால், வைக்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய போராட்டத்தின் நூற்றாண்டின் நிறைவு விழாவினை இரண்டு முதலமைச்சர்களும் சேர்ந்து மிகச் சிறப்பாக நடத்திவிட்டார்கள்.
இந்தியாவையும் பெரியார் மயமாக்கவேண்டும்!
இதுபோன்று பகுத்தறிவு எண்ணம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து, அடுத்த முறை இந்தியாவிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து, இந்தியாவையும் பெரியார் மயமாக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பெரியார் மயமாக்கவேண்டும் என்றால், வேறொன்று மில்லை, எல்லோரையும் புத்திசாலிகளாக ஆக்குவதுதான்.
அது ஒன்றும், கருப்புச் சட்டை தைத்துப் போட்டுக் கொள்வது போன்றது அல்ல.
கோயமுத்தூரில் பெரியார் மய்யம்!
அதேபோன்று, கோயமுத்தூரில் பெரியார் மய்யம் அமைக்கவிருக்கிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்; அதற்கும் அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகுத்தறிவாளர்களுடைய மிகச் சிறப்பான செயல்!
நமது மானமிகு ஆ.இராசா அவர்களுடைய சிறப்பைப்பற்றி, ஆசிரியர் வீரமணி அய்யா, என்னி டம் சொன்னார். பெரம்பலூர் மாவட்டம் என்றாலே, அது ஒரு ‘சபிக்கப்பட்ட மாவட்டம்’ என்று சொல்லி, யாரையாவது தண்ணி இல்லா மாவட்டத்திற்கு மாற்றவேண்டும் என்று சொன்னால், அந்த மாவட்டத்திற்குத்தான் மாற்றுவார்களாம். ஆனால், ஆ.இராசா அவர்கள் வந்த பிறகு, பெரம்பலூர் மாவட்டத்தை ஒரு சாதனை மாவட்டமாக மாற்றி விட்டார். அதுதான் பகுத்தறிவாளர்களுடைய மிகச் சிறப்பான செயல்.
மூடநம்பிக்கை இல்லாத வாழ்க்கை!
நரேந்திர நாயக் அவர்கள் இங்கே மிகச் சிறப்பாக உரையாற்றினார். ஏனென்றால், மூடநம்பிக்கை இல்லாத வாழ்க்கைதான் மிகச் சிறப்பான, அழகான தெளிவான வாழ்க்கை என்பதாகும்.
எல்லோரும் என்ன சொல்வார்கள் என்றால், ‘‘நீங்கள் இயற்கையை நம்புகிறீர்கள்; நாங்கள் கடவுளை நம்புகிறோம், அவ்வளவுதான்” என்று.
அதில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை நாமெல்லாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இயற்கையை, நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது தன்னளவில் இயற்கையாகவேதான் இருக்கும்; அதை நீங்கள் நம்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை.
இயற்கைக்கு ஜோடனை செய்தால்…
அந்த இயற்கையை நீங்கள் பியூட்டி பார்லருக்குக் கூட்டிக் கொண்டு போய், அதற்கு ஜோடனையெல்லாம் செய்து, கடவுளாக மாற்றிவிட்டீர்கள் என்றால், அதற்குள் மதம் வரும்; அதற்குள் ஜாதி வரும்; அதற்குள் சகலவித மான மூடநம்பிக்கைகள் வரும்; சகலவிதமான சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் உள்ளே வந்து, நம்மை இறுக்கமான மனிதர்களாக மாற்றிவிடும்.
பிறக்கும்பொழுது, நாத்திகக் குழந்தையாகத்தான் பிறக்கிறது
நம்முடைய தோழர் நரேந்திர நாயக் சொன்னதுபோல, ஒரு குழந்தை பிறக்கும்போது, அது ஒரு நாத்திகக் குழந்தையாகத்தான் பிறக்கிறது. எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாத ஒரு குழந்தையாகப் பிறக்கிறது.
அக்குழந்தை, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்தால், அந்த மதத்தைச் சார்ந்த முத்தி ரையை அந்தக் குழந்தையின்மேல் குத்துகிறார்கள்.
இப்படி பல முத்திரைகளைக் குத்தி, குத்தி பலவிதமான மூடநம்பிக்கைகளை அதனுடைய மூளைக்குள் திணிக்கும்போது, அதனுடைய கைகளும், மனசும் இறுக்கமாகிப் போய், எல்லாவற்றிற்கும் கட்டுப்பட்ட ஒரு குழந்தையாக மாறி, வாழ்க்கையில் இயல்பாகவே இருக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி விடுகிறது.
யாருக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாது!
சுருக்கமாகச் சொல்லப்போனால், யாருக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாது. யாராக இருந்தாலும் உடல்நிலை சரியில்லை, தலைவலி என்றால், ஒரு மாத்திரையை வாங்கி வாயில் போட்டாலே, அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம். அவர்கள் அந்த மாத்திரையைத்தான் நம்புகிறார்கள்.
நல்ல நேரம், கெட்ட நேரத்தின்மேல்தான் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது!
இன்னும் சொல்லப்போனால், ‘நல்ல நேரம்’, ‘கெட்ட நேரம்’ பார்க்கின்றவர்களுக்குக் கடவுள்மேல் நம்பிக்கை இல்லை. நல்ல நேரம், கெட்ட நேரத்தின்மேல்தான் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான், அவற்றையெல்லாம் பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் உணர்ந்து, நாம் பகுத்தறிவுச் சிந்தனையோடு தெளிவாக செயல்பட்டோம் என்றால், நம்முடைய வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.
இந்தத் திருச்சிக்கு வரும்பொழுது, எனக்கு பழைய காலத்து நினைவுகள்தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன. 17 ஆண்டுகளுக்கு முன்பு ‘பெரியார்’ திரைப்படத்தில், நான் தந்தை பெரியாராக நடித்த பொழுது, பெரியார் மாளிகையில்தான் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.
அங்கே, 1967 ஆம் ஆண்டு, முதன்முறையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் வந்தபொழுது, பேரறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும், பேராசிரியர் அவர்களும், இன்னும் முக்கியமான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், தேர்தலில் வெற்றி பெற்றவுடன், திருச்சிக்கு நேரில் வந்து, அய்யா பெரியாரிடம் வாழ்த்துகளை வாங்கிய பிறகுதான், சென்னைக்குச் சென்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
முதலமைச்சரானவுடன் அண்ணா போட்ட முதல் சட்டம்!
அப்படி பதவியேற்ற உடனே, அண்ணா போட்ட முதல் சட்டமே, ‘சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும்’ என்ற சட்டம்தான்.
சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகின்ற சட்டத்தை எழுதும்பொழுதுகூட, ஆசிரியர் வீரமணி அய்யாவும் கூட இருக்கிறார்கள்.
‘அன்ட் டையிங் த தாலி’ என்ற வார்த்தை வந்த பொழுது, அதை ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியாரிடம் படித்துக் காட்டியபொழுது, ‘‘‘AND’ என்ற வார்த்தையைப் போடாதீர்கள். அப்படி போட்டீர்கள் என்றால், தாலி கட்டுவது கட்டாயமாகிவிடும். ஆகவே, ‘OR’ என்று போடுங்கள்’’ என்று சொன்னார்.
தந்தை பெரியார் அவர்கள் அய்ந்தாம் வகுப்புகூட படித்ததில்லை என்று நினைக்கிறேன்.
ஆத்திகத்திற்கும் – நாத்திகத்திற்கும் விளக்கம் சொன்ன தந்தை பெரியார்!
அவர் சுயமாக சிந்தித்து வந்தவர். எந்த ஒரு கேள்வி கேட்டாலும், பளிச் பளிச்சென்று பதில் சொல்வதில், அவரை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை.
அவரிடம் கேட்டார்கள், ‘‘ஆத்திகத்திற்கும், நாத்திகத்திற்கும் என்னங்க வித்தியாசம்?” என்று.
‘‘கோவிலில் உண்டியலை வைத்து காசு போடுவது ஆத்திகம்; அந்த உண்டியலுக்குப் பூட்டு போடுகிறீர்களே, அதுதான் நாத்திகம்” என்றார் அவர்.
ஏனென்றால், கடவுளுக்கு முன்தான் உண்டியல் இருக்கிறது; அதற்குள் காசு இருக்கிறது; ஆனால், கடவுளை நம்பால், அந்த உண்டியலுக்குப் பூட்டுப் போடுகிறார்கள் அல்லவா; அதற்குப் பெயர்தான் நாத்திகம் என்று அவ்வளவு தெளிவாகச் சொன்னவர்.
கடவுள் என்ற ஒரு கற்பனைக் கருத்தியல் இருக்கிறதா, இல்லையா என்பதுகூட ஒரு பிரச்சினை இல்லை.
எனக்கும், கடவுளுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறா?
அய்யா அவர்களும் அதைத்தான் சொல்வார். ‘‘எனக்கும், கடவுளுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறா? அவரை இதுவரையில் நான் பார்த்ததுகூட கிடையாது” என்று காமடியாக சொல்வார்.
அந்த ஒரு கற்பனைக் கருத்தியலை வைத்துக்கொண்டு, பிறப்பால் உயர்ந்தவன் – தாழ்ந்தவன்.
குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தால் உயர்ந்தவன்; குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தால் தாழ்ந்தவன் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குவது.
ஆணாகப் பிறந்தால் உயர்ந்தவன்; பெண்ணாகப் பிறந்தால் தாழ்ந்தவள் என்கிற ஒரு கட்டமைப்பை உருவாக்குவது.
அந்தக் கட்டமைப்பை தகர்க்கவே முடியாது என்னும்விதமாக வேதங்களை உருவாக்கி, சாஸ்திரங்களை உருவாக்கி, அதற்கெல்லாம் தலைவனாக, ஒரு கற்பனைத் தலைவனை வைத்துக்கொண்டு, எப்படி போராடுவது?
காற்றோடு எப்படி நாம் குத்துச் சண்டை போட முடியும்?
காற்றோடு எப்படி நாம் குத்துச் சண்டை போட முடியும்? அப்படி ஒரு வெற்று கருத்தை வைத்துக்கொண்டு, கடவுள் என்று வைத்துக்கொண்டு, எல்லோருடைய கைகளையும், மனசையும் கட்டிப் போடுவதுதான் அதில் இருக்கின்ற மிகப்பெரிய கொடுமையாகும். அதனால்தானே, அதனை மாற்ற முடியவில்லை.
இன்று நரேந்திர நாயக் அவர்கள் எவ்வளவு சிறப்பாக சொன்னார் என்பதை நீங்கள் எல்லாம் கேட்டிருப்பீர்கள்.
இரண்டாவதாகப் பிறப்பெடுத்தேன் நாத்திகனாக...
அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தும்கூட, நாத்திகனாகப் பிறந்த நான், ஆத்திகனாக நான் விரும்பி யும், விரும்பாமலும் என் மேல் முத்திரைக் குத்தப்பட்டு, மறுபடியும் நான் இரண்டாவதாகப் பிறப்பெடுத்தேன் நாத்திகனாக என்று அவர் சொன்னார்.
‘பெரியார்’ திரைப்படப் படப்பிடிப்பின்போது…
வைக்கம் தெருவில் நடக்கக்கூடாது என்பதை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் போராட்டம் நடத்தினாரோ, அதே வீதியில், இயக்குநர் ஞானராஜசேகரன் இயக்கத்தில் பெரியார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்பொழுது, அய்யா அவர்கள் ஆக்ரோசமாக பேசியதையெல்லாம், நான் வசனமாகப் பேசி நடிக்கும் பொழுது, கேரளாவைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
உடனே நான் இயக்குநரிடம், ‘‘சார், அய்யா அன்றைக்குப் பேசியதையெல்லாம் நான் இங்கே பேசி னால், தகராறு வந்துவிடும். ஆகவே, நான் மெதுவாக பேசுகிறேன். பிறகு டப்பிங்கில் பேசிக் கொள்ளலாம்” என்று சொன்னேன்.
நடிப்பதற்கே பயப்பட்ட ஒரு விஷயத்தை, தந்தை பெரியார் அவர்களே இறங்கி செய்தார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
ஒவ்வொரு நினைவும் எனக்கு பசுமையாக இருக்கிறது. வைக்கம் போராட்டத்திற்காக அய்யா அவர்கள், அங்கே சென்று இறங்குகிறார்.
அய்யா அவர்கள் ஈரோட்டில் மாபெரும் பணக்காரராயிற்றே. நான் கேள்விப்பட்டவரையில், திருவிதாங்கூர் மகாராஜா அவர்கள், ஈரோட்டிற்கு வரும்பொழுதெல்லாம் அய்யா பெரியாருடைய வீட்டில்தான் தங்குவார் விருந்தாளியாக. அதேபோன்று, திருவிதாங்கூருக்குப் பெரியார் அய்யா அவர்கள் சென்றால், அரண்மனையில்தான் தங்குவார்.
அரசு மரியாதையை மறுத்த பெரியார்!
வைக்கம் போராட்டத்திற்காக பெரியார் அவர்கள் அங்கே சென்றபொழுது, திருவிதாங்கூர் அரண்மனை யிலிருந்து அமைச்சர் அவர்கள் வந்து, ‘‘அய்யா உங்களுக்கு ராஜமரியாதை கொடுத்து, அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார், மகாராஜா” என்று சொல்கிறார்.
உடனே பெரியார் அய்யா அவர்கள், ‘‘இங்கே நான் இப்போது வந்திருப்பதே, அவரை எதிர்த்துப் போராடுவதற்காகத்தான்; அதனால்தான், அரண்மனைக்கு நான் வருவது சரியாக இருக்காது என்பதை ராஜாவிடம் சொல்லிவிடுங்கள்” என்று சொன்னார்.
சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டார் அய்யா!
போராட்டம் நடத்திய அய்யா அவர்களை சிறைச்சாலைக்குள் அடைத்து, தீவிரவாதி போன்று, கை, கால்களில் சங்கிலியால் பிணைத்து, கால்களில் இரும்புக் குண்டை கட்டினார்கள்.
இது போதாதென்று, திருவிதாங்கூரில் உள்ள சாமியார்களை எல்லாம் வைத்து, ஒரு பெரிய யாகம் நடத்தினார்கள்; அந்த யாகத்திற்குப் பெயர் ‘‘சத்ரு சங்கார யாகம்” – இந்த யாகம் நடத்துவது எதற்காக என்றால், தந்தை பெரியார் அவர்கள் இறந்து போகவேண்டும் என்பதற்காக.
அன்று இரவு வானத்தை நோக்கி, வேட்டு போடுகின்ற சத்தம் கேட்டிருக்கிறது. எதற்காக வேட்டு சத்தம் என்று அய்யா அவர்களுக்குத் தெரியவில்லை.
பிறகுதான் தெரிந்தது, அய்யா இறந்து போகவேண்டும் என்று யாகம் நடத்தினார்கள்; ஆனால், திருவிதாங்கூர் மன்னர் இறந்து போகிறார்.
யாகத்தை நடத்திய மன்னரே இறந்து போனார்!
சிறைச்சாலைக்குள் அய்யாவுடன் இருக்கும் தோழர்கள் சொல்கிறார்கள், ‘‘அய்யா, நீங்கள் இறந்து போகவேண்டும் என்று அவர்கள் நடத்திய யாகத்தில், அந்த யாகத்தை நடத்திய மன்னரே இறந்து போய்விட்டார், பார்த்தீர்களா?” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
அப்போது அய்யா அவர்கள் சொல்கிறார், ‘‘இந்த யாகம் செய்தால் நான் இறந்து போவேன் என்பது எவ்வளவு முட்டாள்தனமோ, மூடத்தனமோ – அதேபோன்றதுதான், அந்த யாகத்தினால் மன்னர் இறந்து போனார் என்று நீங்கள் எல்லாம் நினைப்பது” என்று.
மன்னர் இறந்ததற்காக அய்யா அவர்கள் சந்தோசப்பட வில்லை. அதுதான் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியார் அவர்களுடைய தொண்டராக நாம் இருந்து ட்டால், வாழ்க்கையில் நமக்கு எல்லாமே சரியாக இருக்கும்.
ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘இயற்கையை எதிர்த்துப் போராடுவதுதான் நம்முடைய வேலை” என்று.
அதுதான், மனித குலத்தினுடைய வேலையே, இயற்கையை எதிர்த்துப் போராடுவதுதான்.
இயற்கையை மாற்றிக் கட்டமைப்பதுதான் பகுத்தறிவு!
ஓர் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினால் என்னாகும்? சுற்றியுள்ள கிராமத்தையெல்லாம் அழித்து விடும். அந்த ஆற்றுக்கு ஓர் அணையைக் கட்டி, தண்ணீரைத் தேக்கி வைத்து, சகல மக்களுக்கும், அந்தத் தண்ணீர் பயன்படும் வகையில், இயற்கையை மாற்றிக் கட்டமைப்பதுதான் பகுத்தறிவு.
மழையை, நாம் மழையாக நினைத்தால்தான் குடை பிடிக்கலாம். அதை வருண பகவான் என்று நினைத்தால், நம்மீது சாமி விழுகிறது; பிறகு எப்படி குடை பிடிக்க முடியும்? நனைந்துகொண்டேதான் போகவேண்டும்.
அமெரிக்க நாட்டிலுள்ள அடிப்படைவாதிகள்!
பெரிய அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்த அமெரிக்க நாட்டில், அடிப்படைவாதிகள் என்று ஒரு குரூப் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஷேவ் செய்ய மாட்டார்கள்; குளிக்கமாட்டார்கள்; ஏனென்றால், கடவுளால் படைக்கப்பட்டவர்கள் நாம்; அதனால், அப்படியேதான் நாம் வாழவேண்டும் என்று சொல்லி, உடல்நிலை சரியில்லை என்றாலும், மருந்து, மாத்திரை களை சாப்பிடமாட்டார்கள். அப்படியே இருந்து இறந்து போவார்கள்.
முடிந்த அளவிற்கு அறிவியலைப் பயன்படுத்தி…
மனிதனாக பிறந்தவர்களான நாம், முடிந்த அளவிற்கு அறிவியலைப் பயன்படுத்தி, நம்முடைய வாழ்நாளை முடிந்த அளவிற்கு நீட்டிக்க வைத்து, அந்த வாழ்நாள் மூலமாக இந்த மனித சமுதாயத்திற்கு எந்த அளவிற்குப் பயனுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நிரூபிக்கவேண்டும்.
அதற்காகத்தான் நாம் மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்தாகும்.
திரைப்படத்தில் இறந்து போனவர்கள் போன்று நடித்தால்…
மூடநம்பிக்கைகளை வைத்துக்கொண்டு பல விஷ யங்கள் நடக்கும். படப்பிடிப்பில் இறந்து போவது போன்று நடித்தால், அதற்குப் பிறகு, செத்துப் போனவர்கள் போன்று நடித்தவர்களுக்குத் தேங்காய் சுற்றவேண்டுமாம்; கேமிராவைப் பார்த்து ஒருமுறை சிரிக்கவேண்டுமாம்; அப்படி இல்லையென்றால், உண்மையிலேயே இறந்து போய்விடுவோமாம். இதுபோன்ற காமடியெல்லாம் இருக்கிறது எங்களுடைய திரைப்படத் துறையில்.
47 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த முதல் திரைப்படம், ‘‘சட்டம் என் கையில்” நான் இறந்து போகும் காட்சி. உடனே தேங்காயைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்; நான் ஓடிவிட்டேன்; கேமிராவைப் பார்த்து சிரியுங்கள் என்று சொன்னார்கள். நான் சிரிக்கமாட்டேன் என்றேன்.
சிரிக்கவில்லை என்றால் என்னாகும்? என்றேன்.
அப்படி நீங்கள் சிரிக்கவில்லை என்றால், உண்மை யிலேயே நீங்கள் இறந்து போய்விடுவீர்கள் என்றனர்.
அது என்னுடைய பிரச்சினை; இன்று கடைசி நாள் படப்பிடிப்புதானே, பரவாயில்லை என்றேன்.
47 ஆண்டுகளும் ஓடிவிட்டன; நான் நன்றாகத்தான் இருக்கிறேன்!
அந்நிகழ்வு நடந்து இன்றைக்கு 47 ஆண்டுகள் ஆகின்றன; நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.
ஆகவே, ஒவ்வொரு இடங்களிலும், நாம் பகுத்தறிவாளர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
இன்றைய துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்த ‘கெத்து’ திரைப்படத்தில் நான் நடித்தேன். அத்திரைப்படப் படப்பிடிப்பின்போது, மேலே ஏறி ஒரு விஷயத்தைப் பார்க்கும்பொழுது, கால் இடறி, கீழே விழுந்து காலில் ரத்தம் கட்டிக் கொண்டது; அதனை அறுவைச் சிகிச்சை செய்துதான் சரி செய்ய முடியும் என்றார்கள்.
எங்களுடைய சொந்தக்காரர் ஒருவர், டாக்டராக இருக்கிறார். அவரிடம்தான் அறுவை சிகிச்சை செய்ய நான் சென்றேன்.
இன்றைக்கு அறுவைச் சிகிச்சை செய்துவிடலாமா? என்று கேட்டார்.
சரிங்க என்றேன்.
உங்களுக்கு நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து செய்து கொள்கிறீர்களா? என்று அந்த டாக்டர் கேட்டார்.
ஆமாங்க டாக்டர், இருக்கிறது என்றேன்.
என்றைக்கு என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை, எமகண்டம், ராகுகாலம் பார்த்துச் சொல்லுங்கள், அன்றைக்கு அறுவைச் சிகிச்சையை செய்துகொள்கிறேன் என்றேன்.
இன்றுதான் செவ்வாய்க்கிழமை; ஆகவே, நாளைக்கு வாருங்கள், செய்யலாம் என்றார்.
உங்கள்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது டாக்டர் என்றேன்!
நான், பிடிவாதம் பிடித்து, உங்கள்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது; உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு அறுவைச் சிகிச்சை செய்யுங்கள் என்று சொன்னேன்.
அன்றே அறுவைச் சிகிச்சையை செய்துகொண்டேன். 10 ஆண்டுகள் ஆகின்றன, ஒரு பிரச்சினையும் இல்லை; நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.
அதனால், எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத வாழ்க்கைதான் மிகவும் சுலபமான, மகிழ்ச்சியான வாழ்க்கையாகும்.
அதில் இரண்டு விஷயம் இருக்கிறது.
பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது, சமூக மகிழ்ச்சிக்கானது!
பெரியார் அய்யா வழியில் நாம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம் என்றால், அவர் சொல்லுகின்ற கடவுள் மறுப்பு என்பது, சமூக மகிழ்ச்சிக்கானது; கடவுள் இருக்கிறதா, இல்லையா? என்பது பிரச்சினையல்ல. அதில் மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது; ஒரே இடத்தில் பணம் குவியக்கூடாது. அது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்;
அனைவருக்கும் சமமான உரிமை வேண்டும். அனைவருக்கும் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு எல்லாம் வேண்டும். அதற்குத் தடையாக இருக்கின்ற சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம்; இதற்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய கடவுளை மறுப்பது – சமூக மகிழ்ச்சிக்காக கடவுளை மறுப்பது அய்யாவினுடைய அடிப்படை கொள்கை.
ஆனால், தனி மனித மகிழ்ச்சியாக அதனை நீங்கள் எடுத்துக்கொண்டாலும்கூட, என்னுடைய அனு பவத்தில் சொல்கிறேன்; நானும் மருதமலையில் மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறேன்; பழனி யில் மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறேன்; திருப்பதி யில் மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறேன். செவ்வாய்க்கிழமைதோறும் மாங்காடு கோவிலுக்குப் போவேன்;
வெள்ளிக்கிழமைதோறும் பாடிகாட் முனீசுவரன் கோவிலுக்குச் செல்வேன். அப்பொழுதெல்லாம் உண்மையிலேயே டென்ஷனாக இருக்கும். சினிமாவில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கின்ற காலகட்டம்; அப்பொழுதுதான் புதிதாக கல்யாணம் ஆனவன். இன்றைக்கு ஏதாவது சினிமாவிற்குப் போகவேண்டும் என்று அட்வான்ஸ் புக்கிங் செய்யலாம் என்றாலும் முடியாது; ஏனென்றால், இந்தக் கோவில் வேலைகள் எல்லாம் குறுக்கே வந்து நிற்கும். மனைவியை அழைத்துக்கொண்டு பீச்சிற்கோ, ஷாப்பிங்கிற்கோ, சினி மாவிற்கோ போகவேண்டுமென்றாலும், கோவிலுக்குப் போவதை வைத்துத்தான் முடிவு செய்யவேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகின்ற ஒரே விஷயம்!
இப்போது அதிலிருந்து வெளியே வந்து, நாத்திக னாகப் பிறந்த நான், மறுபடியும் நாத்திகனாக ஆன பிறகு, என்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு மனிதனுடைய சுயநலம் என்ன? ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகின்ற ஒரே விஷயம் – ‘‘நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்; மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்” என்பதுதான்.
சுயநலமாகப் பர்த்தாலும்கூட, நம்முடைய தனி மனித மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பது, மூடநம்பிக்கை கள்தான்.
அந்த மூடநம்பிக்கைகளை நீங்கள் தூக்கி எறிந்து விட்டால், சுதந்திரமான பறவை – எதைப்பற்றியும் கவலைப்படாமல், சிறகடித்துப் பறந்துகொண்டே இருக்கலாம்.
இன்றைய சூழ்நிலையில், நமக்கு அமைந்த வாய்ப்பு களில் எது சிறந்தது? என்பதைத் தேர்ந்தெடுத்து, நம்மு டைய வாழ்க்கைப் பயணத்தை நடத்திக் கொண்டே போவோம்.
இப்படி நல்ல ஒரு சிந்தனையை எனக்கு உரு வாக்கிக் கொடுத்தது தந்தை பெரியாருடைய இந்தப் பகுத்தறிவாளர் இயக்கம்தான்.
ஆசிரியரின் ‘‘வாழ்வியல் சிந்தனை’’ புத்தகங்கள்!
அதுவும் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதிய ‘‘வாழ்வியல் சிந்தனை’’ புத்தகங்களைப் படித்தீர்கள் என்றால், இன்னும் தெளிவாகி விடலாம்.
நான் பொதுநலமாகப் பார்க்கவில்லை; சுயநல மாகத்தான் பார்க்கிறேன். ‘‘வாழ்வியல் சிந்தனை’’ புத்தகங்களைப் படித்தீர்கள் என்றால், உங்களுடைய வாழ்க்கை மிகவும் இயல்பானதாக இருக்கும்.
13 ஆவது மாநாடு என்று சொன்னாலே, நிறைய பேர் பயப்படுவார்கள்; அய்யய்யோ, 13 ஆம் நெம்பர், மிகவும் மோசமான நெம்பர் என்பார்கள்.
சமூக மகிழ்ச்சிக்கும், தனி மனித மகிழ்ச்சிக்கும் வித்திடுவது!
அதனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல், நமக்கும், சமூக மகிழ்ச்சிக்கும், தனி மனித மகிழ்ச்சிக்கும் வித்திடுவது – தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைக் கொள்கையும், பகுத்தறிவு சிந்தனையும், எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத வாழ்க்கைதான் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு ‘இனமுரசு’ சத்யராஜ் உரையாற்றினார்.