பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன விவகாரம்:
ஆளுநரின் உத்தரவிற்குத்
தடை விதிக்க வேண்டும்!
புதுடில்லி, ஜன.17– பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்தது. யு.ஜி.சி. தலைவரையும் சேர்த்து தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினார்.
ஆளுநரின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் யு.ஜி.சி. தலைவரை சேர்த்து துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு யு.ஜி.சி தலைவரை விடுத்து மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேடுதல் குழுவை அமைத்து அர சாணையை வெளியிட்டது.
துணைவேந்தர்கள் நியமன விவ காரத்தில் ஆளுநரின் செயல்பாடு அரச மைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது.
துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் தலையீடுகளை கருத்தில் கொண்டு வழக்கை விசாரிக்க வேண்டும்.
துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தின் ஆளுநர் தாமதம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிடவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று (17.1.2025) விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி பர்திவாலா, துணைவேந்தர் நியமன வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் முன்பு இப்பிரச்சினைக்கு ஒன்றிய அரசு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆளுநரும், தமிழ்நாடு அரசும் தீர்வு காணாவிட்டால், உச்சநீதிமன்றம் தலையிடும் என்றும் நீதிபதி பர்திவாலா கூறினார்.