தமிழ்ப் புத்தாண்டில் நமது சிந்தனைகள்!

Viduthalai
4 Min Read

தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்பது தை முதல் நாள் தான் என்று தமிழறிஞர்களால் கூடி முடிவெடுக்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது இந்த வகையில் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் தி.மு.க. ஆட்சிக்குப்பின் ஆட்சியமைத்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அந்த ஆணை ரத்து செய்யப்பட்டு சித்திரை முதல் நாளே தமிழ் ஆண்டு பிறப்பு என்று புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

60 ஆண்டுகள் தமிழ் ஆண்டுகளாம்; அதில் ஒன்றுகூட தமிழில் பெயர் கிடையாது! அது ஒருபுறம் இருக்க இந்த 60 தமிழ் ஆண்டுகளும் பிறந்ததற்குச் சொல்லப்படும் ஆபாசம் என்பது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல; தமிழ் மொழியைக் கொச்சைப்படுத்துவதுமாகும்.

நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் இந்த அறுபது தமிழ் வருடங்களாம்!

அண்ணா பெயரையும் ‘திராவிட’ என்ற இனப் பெயரை யும் கட்சியில் சூட்டிக் கொண்ட ஓர் ஆட்சியில் இந்த ஆரியத்தனம் கோலோச்சுகிறது என்றால், வெட்கித் தலைக் குனியத்தான் வேண்டும்.

தமிழ்த் தேசியம் வாய்க்கிழியப் பேசுபவர்களும் இதுகுறித்து மறந்தும் உதட்டை அசைப்பதில்லை.
படை எடுப்பில் முதன்மையானது பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

தமிழன் ஊர்ப் பெயர்கள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டன; தமிழரசர்கள் கட்டிய கோயில்களின் பெயர்களும் சமஸ் கிருதமயம் தான்; கோயிலில் வழிபாட்டு மொழியும் சமஸ் கிருதமே. தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழன் அர்ச்சகனாக முடியாது. தமிழ்ப் புத்தாண்டுப் பிறக்கும் இந்நாளில் இதுகுறித்து விழிப்புடன் சிந்திக்க வேண்டாமா? மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாமா?

தமிழன் என்று சொல்லிக் கொண்டு கொண்டாடப்படும் பண்டிகைகள் என்னென்ன?

தீபாவளி, ஸ்கந்தர் சஷ்டி, கோகுலா அஷ்டமி, இராம நவமி, மகிஷாசுர வதம், அட்சய திருதி, ஆவணி அவிட்டம், சரசுவதி பூஜை, விஜயதசமி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, நாரதர் ஜெயந்தி, பிரதோஷம், நவராத்திரி, சூரசம் ஹாரம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், சிறீ வரலட்சுமி விரதம், சிறீ மஹா சங்கட ஹர சதுர்த்தி ஆகியவைகளாகும்.

மதப் போதையாலும் பக்திக் கிறுக்குத்தனத்தாலும் இவற்றை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.
தந்தை பெரியார் இவற்றின்மீது ஏன் கை வைத்தார்? ஆணி வேர் வரை சென்று ஏன் அசைத்தார் என்பதை இவற்றின் வழியாகவாவது தெரிந்து கொள்ள வேண்டாமா?

1937இல் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக வந்தபோது பள்ளிகளில் ஹிந்தியைத் திணித்தார்.
லயோலா கல்லூரியில் அவர் பேசும்போது ஓர் உண்மையைத் தன்னை அறியாமலேயே கக்கினார்.

சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வருவதற்கே முதலில் ஹிந்தியைக் கொண்டு வந்துள்ளேன் என்று சொன் னாரே!
தந்தை பெரியார் தலைமையில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து ஹிந்தித் திணிப்பை எதிர்த்த நிலையில் நாட்டில் மொழி உணர்வும், இன உணர்வும் பீறிட்டுக் கிளம்பிற்று.

ஆச்சரியார் ஆட்சியை விட்டும் விலகினார். மேடைத் தமிழிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அக்ராசனர், தலைவர் ஆனார்; பிரசங்கம் சொற்பொழிவானது, வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்தது. நமஸ்காரம் வணக்கம் என்று மணம் வீசியது.
நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனார், இராமையன் அன்பழகன் ஆனார், சோமசுந்தரம் மதியழகன் ஆனார் இப்படியாகப் பெயர் சூட்டுவதிலும் மறுமலர்ச்சி ஏற்படத் தொடங்கியது; இப்பொழுது அதில் ஒரு சறுக்கல், மீண்டும் மொழிப் புரட்சி ஏற்பாட்டாக வேண்டும்

.
தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் நாளில் இதற்கொரு முடிவு காண முந்துறுவோம்!
இன்றைக்கு இருக்கக் கூடிய ஒன்றிய பிஜேபி அரசு ஆர்.எஸ்.எஸ்.ைஸப் பின்பலமாகக் கொண்டது. அதன் காரணமாகத் தான் 8 ஆண்டு கால கட்டத்தில் செத்துச் சுடுகாட்டுச் சம்பலாகிப் போன சமஸ்கிருதத்திற்கு ரூபாய் 1,487.9 கோடியும் தமிழுக்கு வெறும் 74.1 கோடியும் ஒதுக்கப்பட்டன.

இதைப்பற்றி எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுப்பது தந்தை பெரியாரின் சுயமரியாதை மண்ணான தமிழ்நாடுதான்.
திராவிட மாடல் அரசு இந்தத் திசையில் கவனமும் கவலையும் செலுத்துவதைக் கடமையாகக் கொண்டதாகும்.
தி.மு.க. தலைவராக மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற போது (28.8.2018) அவர் செய்த பிரகடனம் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகும்.

‘இன்றைக்கு நிலவும் அரசியல், சமூக சூழ்நிலைகள் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பெரும் சவாலாக நிலவுகின்றன. கல்வி, கலை, இலக்கியம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளையெல்லாம் அதிகார பலத்தால், மதவெறியால் அழித்திட ஒன்றிய அரசு முனைந்து வருகிறது. நீதித்துறை, கல்வித்துறை மாநிலங்களில் ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் அனைத்தும் மக்களாட்சியின் மதச்சார்பற்ற கொள்கைகளின் மாண்பைக் குலைக்கும் செயல்களாக அமைந்து கொண்டிருக்கி்ன்றன.

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளாத விலங்கோ இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மிடமிருந்து தொடங்கட்டும் – இன்று நீங்கள் பார்க்கும் கேட்கும் மு.க. ஸ்டாலின் ஆகிய நான் ‘புதிதாய்ப் பிறக்கிறேன்.

தன் ஜாதியே உயர்ந்தது என்று நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரையும் தன் உடன் பிறப்பாக நினைப்போம் – எளியோர்க்கும் கரம் கொடுப்போம்.

வட இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்டவா!

உலகமே வியக்கும் சமூகநீதிக் கொள்கைகளின் தாய் வீடாம் நம்முடைய கழகம் தந்தை பெரியார் நமக்குக் கற்றுத் தந்த சுயமரியாதை பெற்றுத் தந்த சமத்துவம் இவற்றிலிருந்து நாம் ஒரு நாளும் பின் வாங்கப் போவதில்லை’’ என்று சொன்ன தி.மு.க. தலைவர் தான் இன்றைய ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர்!

அவர்தந்த அந்தச் சூளுரை நனவாகும் செயல் மலராக மணக்கட்டும்!

அனைவருக்கும் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்!

வாழ்க தந்தை பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *