ஆந்திரா – விஜயவாடாவில் 12ஆம் உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவரின் அறிவியல் வெளிச்சம் பாய்ச்சிய சிறப்புரை
கல்வியுடன் அறிவியல் படிப்பும் படித்தோரில் மிகப் பலர் எண்ணற்ற மூடநம்பிக்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர். போலியான அறிவியல் மக்களின் கண்களை மறைத்து வருகிறது. பழைமைவாத மடமையை விட்டொழித்து புதுவாழ்வு வாழ முன்வர வேண்டும் என 12ஆம் உலக நாத்திகர் மாநாட்டில், திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவியல் மனப்பான்மையினை பரப்பிடும் வகையில் இணைய வழியில் உரையாற்றினார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மய்யம் (Atheist Centre) 4 & 5 ஜனவரி 2025 ஆகிய இரண்டு நாள்களும் 12ஆம் உலக நாத்திகர் மாநாட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும், ஆந்திரா – தெலங்கானா மாநிலங்களிலிருந்தும் நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள் எனப் பலர் தனிப் பேராளர்களாகவும் தாங்கள் சார்ந்த அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்திடும் வகையிலும் நாத்திகர் மாநாட்டில் கலந்துகொண்டனர். மாநாட்டினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிடும்படி திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் வேண்டியிருந்தனர். தலைவரும் பங்கேற்று உரையாற்றிட ஒப்புதல் அளித்திருந்தார். மாநாடு நெருங்கிய வேளையில் இயக்கப் பணி நிமித்தம் ஆசிரியர் அவர்கள் மாநாட்டிற்கு செல்ல இயலாத நிலையில் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன், மாநாட்டில் பங்கேற்றார்.
தொடக்க நிகழ்ச்சி
விஜயவாடா நாத்திகர் மய்யத்தை நிறுவிய நாத்திக அறிஞர் கோரா அவர்கள் பற்றிய ஒளிப்படக் கண்காட்சி மாநாட்டின் முதல் நாளன்று (ஜனவரி 4ஆம் நாள்) திறந்து வைக்கப்பட்டது. பின்னர் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கோ. சமரம் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார். மாநாட்டு சிறப்பு மலரினை கழகப் பொருளாளர் வீ. குமரேசன் வெளியிட முதல் நகலினை விஜயவாடா மக்களவை உறுப்பினர் கேசினேனி சிவனாத் பெற்றுக் கொண்டார். தொடக்க உரையினை ஆங்கிலத்தில் தமிழர் தலைவர் காணொலி வாயிலாக வழங்கினார்.
12ஆம் உலக நாத்திகர் மாநாடு – விஜயவாடா (ஆந்திரா) ஆசிரியர் சிறப்புரை
ஆசிரியரின் ஆங்கிலச் சிறப்புரையை காணொலி வாயிலாக சபையினர் கேட்டு மகிழ்ந்தனர். உரையின் தமிழாக்கச் சுருக்கம் பின்வருமாறு:
“கோரா குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பு வணக்கம். 12 ஆம் உலக நாத்திகர் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் பணிவான வணக்கம். நேர்மறை நாத்திகம், அறிவியல் மனப்பான்மை, மதச்சார்பின்மை – இவை மூன்றும் தான் இந்த மாநாட்டின் மய்யக்கருத்துகளாக தீர்மானிக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சார்ந்த உரைகளுடனும், விவாதங்களுடனும் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற என் இதயங்கனிந்த வாழ்த்துகள். தவிர்க்க இயலாத சில பணிகள் காரணமாக என்னால் நேரில் கலந்துக்கொள்ள முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். இருப்பினும் ஒரு சில எண்ணங்களை உங்கள் அனைவருடனும் காணொலி வாயிலாகப் பகிர்ந்துக் கொள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாரும், கோரா அவர்களும் நாத்திக இயக்கத்திற்கே தூண்களாக விளங்கி, பரப்புரைகள் மூலம் பகுத்தறிவுக் கொள்கையை நாடு முழுவதும் பரவிப்படரச் செய்ய பாடுபட்டனர். அவர்களின் பணியை செய்து முடிக்கவே நாம் போராடி வருகிறோம். அறிவியல் மனப்பான்மையும் மதச்சார்பற்ற ஜனநாயகமும் நிலவும் புதிய உலகை உருவாக்குவதே இன்று நம் லட்சியம். இந்த அறப்போரில் உங்களில் ஒருவனாக நான் எப்போதும் உடன் இருப்பேன். இந்தப் போரில் முன்னிலை வகிக்கும் நாம் வெறும் மேடைப் பேச்சுடன் நிற்காமல் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு கொள்கைக் குடும்பமாகவே எப்போதும் இருப்போம். முற்போக்குச் சிந்தனையாளர்களான நம் அனைவருக்கும் இன்றைய காலக்கட்டம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால் எதற்கும் அஞ்சாதவர்கள் நாம். நேர்மறையான நாத்திக உணர்வையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் மக்களின் மனங்களில் விதைத்துக்கொண்டே இருப்போம். அறியாமை இருளிலிருந்து அவர்களை வெளியேற்ற நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம். ஒன்றிணைந்த போராளிகளாகவே நாம் எப்போதும் இருப்போம். எங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் உங்கள் அனைவருக்கும் என்றென்றும் உண்டு என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.
போலி அறிவியலை புறந்தள்ளுவோம்
அறிவிலிகள் ஏட்டுக்கல்வி பெறாதவர்கள் என்று மட்டுமே நம்பிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று இலக்கணம் மாறிவிட்டது. சமூக மாற்றங்களின் அவசியத்தை உணராத பிற்போக்குவாதிகளே இன்று உண்மையில் அறிவிலிகள் என்பேன் நான். கல்வியறிவும் அறிவியல் உணர்வும் உள்ள வர்களே எண்ணற்ற மூடநம்பிக்கைகளை பரப்பி வருவது அதிர்ச்சியளிக்கிறது. போலியான அறிவியல் மக்களின் கண்களை மறைத்து வருகிறது. எது உண்மையான அறிவியல் என்பதை புரிந்துக் கொள்வதிலேயே மக்கள் மனங்களில் தெளிவின்மையும் குழப்பமும் நிலவிவருகின்றன. மதமும் ஸநாதனமுமே வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் என்ற மாயையில் மக்கள் உள்ளனர். போலியான அறிவியல் என்னவென்ற புரிதலே இல்லாமல் மக்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர். விண்கோள்கள் சார்ந்த ஆய்வு நிஜமான அறிவியல் என்றும் – ஜோதிடக்கலை என்பதே போலியான அறிவியல் என்றும் சுருக்கமாக விளக்கினாலாவது இவர்கள் புரிந்துக் கொள்வார்களா? வாஸ்து சாஸ்திரத்திற்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை என்று எத்தனை முறை வலியுறுத்தினாலும் இந்த அறிவிலிகள் ஒப்புக்கொள்வார்களா?
நாத்திகர் எண்ணிக்கையில் குறைவே
கோராவும், பெரியாரும் துவக்கிய இயக்கங்களும், உலகம் முழுவதும் உள்ள நாத்திகர் அமைப்புகளும் பிற்போக்குத்தனத்தை வேரோடு அகற்றும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளன. நீங்களும் அதில் அங்கம் வகிக்கிறீர்கள். நாம் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கலாம். பிற்போக்குவாதிகள் ஏராளமாக இருக்கலாம். அதனால் என்ன? காற்றடைத்த பை ஒன்றை சுருங்கி விழச் செய்ய ஒரு காதறுந்த ஊசியால் கூட முடியுமல்லவா? நம்மாலும் அந்த அறிவிலிகளின் கூட்டத்தை பலமிழக்கச் செய்ய முடியும் – ஒருங்கிணைந்து நாம் போராடினால்.
பகுத்தறிவை வெல்ல ஸநாதன கோட்பாடுகளால் இயலும் என்று நிரூபிக்கப்பட்டால் நாமும் ஸநாதனத்தை ஏற்றுக்கொள்வோம். ஆனால் அது என்றுமே நடக்கப் போவதில்லை! கண்மூடித்தனமாகத்தான் எல்லாவற்றையும் நம்புவோம் என்று மடமையின் உச்சத்தில் நின்று கூக்குரல் எழுப்பும் இவர்களை எப்போது திருத்தப்போகிறோம்? பழமைவாத மடமையை ஏற்றுக்கொள்ளா விட்டால் நாம் நரகத்தில் தள்ளப்படுவோம் என்றல்லவா நம்மையே அச்சுறுத்தி வருகிறார்கள் இந்த மூடர்கள்? நம்மை சமூக விரோதிகள் என்கிறார்கள். நம்மை சமூகம் விலக்கி வைக்க வேண்டும் என்கிறார்கள். எத்தகைய வேடிக்கை, எப்படிப்பட்ட நகைச்சுவை இது! நம் எதிர்ப்புகளைக் கண்டும் இவர்கள் அஞ்சுவதாகத் தெரியவில்லையே? நாம் தான் இனி நம் போராட்டங்களை மேலும் தீவிரமாக்கி இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். நாம் வெற்றியடைவது உறுதி நண்பர்களே!
நாம் பிரிவினைவாதிகள் அல்ல. அனைவரும் ஒன்றுப்பட்டு வாழவேண்டும் என்பதே நம் நோக்கம். நம் கொள்கைகளில் நாம் சற்றும் தளராமல் உறுதியாக இருப்போம். இதற்காக உயிரையும் இழக்க நாம் தயங்க மாட்டோம்.
மனிதநேயம் நாடு முழுவதும் நிலவ வேண்டும். ஏகாதிபத்திய ஆட்சி நிலவும் சமூகமாக இது இருக்கக்கூடாது. நிறைந்திருக்க வேண்டியது, அன்பும், அரவணைப்பும் அனுதாபமும் மட்டுமே – அராஜகமோ, அடக்குமுறையோ அல்ல. தேவைப்படுவது, சமத்துவம் தானேயொழிய சர்வாதி கார ஆட்சி அல்ல. இத்தகைய மாற்றத்தை உருவாக்குவதே நம்மைப்போன்ற அமைப்புகளின் லட்சியமாக இருக்க வேண்டும்.
நோயற்ற உலகம் வரும்
இவர்கள் நம்மை சமூகவிரோதிகளாகவும், தேச விரோதிகளாகவும் கருதுவது விந்தையானது. நாம் மானுட அபிமானிகள். மனிதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தீயசக்திகள் புரிந்துக்கொள்ள வேண்டும். அறிவியல் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வேண்டும். மக்கள் மனங்களில் அறிவியல் மனப்பான்மை வேரூன்ற நாம் போராட வேண்டும். புதுப்புது நோய்கள் தலைதூக்கி வருகின்றன. எனவே மருத்துவ உலகிலும் புதிய கண்டுபிடிப்புகளும் சிகிச்சை முறைகளும் தேவை. நோய்கள் குணமாவதில் ஆன்மிகத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. கரோனா நம்மை தாக்கிய போது ஏராளமானவர் உயிரிழக்க நேர்ந்தபோது எல்லாமே ‘தெய்வச்செயல்’ என்றார்கள் பலர். அறிவியல் வளர்ச்சியும் நவீன கண்டுபிடிப்புகளும் தான் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது. நாம் வென்றது அறிவியலாலும் நம் மதியாலும்தான். ‘தலைவிதி’ என்ற சொல்லே அபத்தமானது. தீர்க்க முடியாதது என்று கருதப்பட்ட அம்மை நோயையே அடியோடு அழித்தது அறிவியல். அறிவியல் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. தடுக்க முடியாத நோய் என்று உலகில் எதுவுமே இல்லாத நிலையும் இனிவரும் உலகில் அறிவியலாளர்களால் ஏற்படத்தான் போகிறது. ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டு வந்ததால் தான் நாம் இவ்வளவு காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம். நாத்திக வாதம் பலரால் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டு வினோதமான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. நம்மை அறிவிலிகள் பரிகாசம் செய்வது தடுக்கப்படவேண்டும். நாம் கடவுளை மட்டுமா மறுக்கிறோம்? வேதங்களையும் புராணங்களையும் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள மூடப் பழக்க வழக்கங்களையும் சேர்த்தே ஏற்க மறுத்து, எதிர்த்து வருகிறோம். கடவுளின் அவதாரங்கள் என்று தங்களை அறிவித்துக்கொண்டு பல மோசடிப் பேர்வழிகள் நடமாடி வருகின்றனர். இவர்கள் பின்னால் ஒரு கூட்டமே போய்க் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே நூற்றுக்கணக்கான கடவுள்களை உருவாக்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். நம் மக்களின் அறிவுக் கண்களைத் திறக்கவே நாத்திக மய்யங்கள் போராடி வருகின்றன. சிரமமான பணி தான் என்றாலும் இயலாத பணி அல்ல. களைப்படைந்து விடாமல் நாம் போராடுவோம்.
மனிதநேயமற்ற ஆன்மிகவாதிகள்
காஞ்சி மடத்துப் பெரிய சங்கராச்சாரியார் நாத்திகர்களை கடுமையாக எதிர்க்கும்படி தனது பக்தர்களுக்கு அறிவுறுத்தி வந்ததை மறக்கமுடியுமா? நாத்திகர்களை பொருட்படுத்தாதீர்கள், நெருங்க விடாதீர்கள் என்றெல்லாம் கூறிவந்தவர் அவர்.
இதுவா மனிதநேயத்தின் அடையாளம்? இவர்கள் மனங்களில் சிறிதளவு மனித நேயமாவது இருக்குமா?
கடவுள் நம்பிக்கை உள்ளவராகவே ஒரு மருத்துவர் இருந்தாலும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் கை விடுவாரா? “எல்லாம் உன் விதி! கர்மவினை!” என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டிருந்தால் இவ்வளவு காலமும் நோயாளிகளின் கதி என்னவாகியிருக்கும்? இந்தப் புரிதலும் இல்லாமல் மக்கள் ஆன்மிகவாதிகளைப் போற்றிக் கொண்டிருக்கிறார்களே? என்ன செய்வது? இவர்களை யெல்லாம் திருத்த வேண்டியது நம் கடமை.
வேதங்களையெல்லாம் மறுத்தவர் புத்தர். பவுத்தம் அன்றே அறிவித்தது கடவுள் மறுப்பை. மூதாதையர்கள் நம்பினார்கள் என்பதற்காகவே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று அறிவுரை வழங்கியவர் புத்தர். சுயமாகச் சிந்தித்து சரியென்று படுவதை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றவர் அவர். பகுத்தறிவை போதித்த புத்தரையே ஒரு கட்டத்தில் கடவுளாக்கி விட்டார்கள்.
குடிமக்களின் அடிப்படைக் கடமை
அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையும், பிரிவு எண் 51A(h) பகுதியும் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதை குடிமக்களின் கடமை என்றே வலியுறுத்துகின்றன. மனித நேயத்தின் அவசியத்தையும் அவை பறைசாற்றுகின்றன எனினும் மக்கள் மனங்களில் புரிதல் ஏற்படவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி அபாரமாக உள்ள யுகம் இது. ஆனாலும் சமத்துவமோ, சகோதரத்துவமோ முழுமையான வளர்ச்சியடையவில்லை. கற்கால மனிதர்கள் போல் எல்லோ ரும் உள்ள அவல நிலை மாற வேண்டும். நாம் அனைவரும் இதற்காக தொடர்ந்து பாடுபடவேண்டும். ஒரு புதிய உலகம் உருவாக நாம் போராட வேண்டும்.
பெரியாரும் கோராவும்
நாத்திகக் கொள்கை நேர்மறையான தத்துவம். எதிர்மறையாக அதில் எதுவுமில்லை. கோராவும், பெரியாரும் இதைத்தான் வலியுறுத்தி வந்தார்கள். கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போது ஆழமாகத் தோண்டாமல் அடிக்கல் நாட்ட முடியாது. மண்டிக் கிடக்கும் புதர்கள் முதலில் அகற்றப்பட வேண்டும். வாழ்வியலிலும் அதுவே உண்மை. வேரூன்றிவிட்ட மடமைகளை களைந்து எறிந்தால் தான் பேதங்களற்ற மனித நேய சமூகத்தை நம்மால் ஓங்கி உயர்ந்த கட்டடமாக அமைக்கமுடியும். ஜாதி, மதம் போன்ற விஷவித்துக்கள் நீக்கப்பட்டால் மற்ற மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிச்சயம் ஏற்படும்.
பொருளாதார, சமூக, அரசியல் நீதிகள் மூன்றுமே பின்பற்றப் பட வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மூன்றுமே புத்தர் உரைத்த தத்துவங்கள் என்று பாபாசாகேப் அம்பேத்கர் பலமுறை குறிப்பிட்டுள்ளார். அவை பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தால் உருவான கொள்கைகள் என்று சிலர் விமர்சித்ததை மறுத்தவர் அவர்.
‘கடவுளை மற – மனிதனை நினை’
தீண்டாமை, பாராமை, நெருங்காமை – மூன்றுமே சமூக அநீதியாகும். ஆன்மிகம் மக்களைப் பிரிக்கிறது. வகை வகையாக கூறு போடுகிறது. நாத்திகமோ அனைவரையும் இணைத்து ஒன்றுபடுத்துகிறது. ஜாதிகளின் படி நிலையமைப்பு மடமையின் உச்சம். மதவெறி சார்ந்த மோதல்களும் மானுடத் திற்கு எதிரானவையே. இவற்றையெல்லாம் நாம் அழிக்க வேண்டும்.
“கடவுளை மற. மனிதனை நினை” என்று ஒவ் வொருவரும் கூறும் நிலை உருவாக வேண்டும். பெரியார் சிந்தனையின் ஆணிவேர் இதில்தான் உள்ளது. ஜாதிகள் அழிந்தாலே எல்லா துயரங்களும் விலகும் என்று நம்பியவர் அவர். அவர் உருவாக்கிய சுய மரியாதை இயக்கத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க வேண்டும். பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் எல்லோருமே மனித நேயர்களாக வாழ்ந்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். அறிவியல் மனப்பான்மையுடன் நாம் தொடர்ந்து போராடுவோம். கோராவும், தந்தை பெரியாரும் கண்ட கனவுகளையெல்லாம் நனவாக்குவோம். நாத்திகக் கொள்கைக் கொடி விண்ணைத் தொடும் உயரத்திற்குப் பறக்கட்டும். எங்கள் ஆதரவு உங்கள் அமைப்புகளுக்கு என்றும் இருக்கும். நன்றி.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
தொடக்கவுரைக்குப் பின்னர், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், தேசிய செயலாளர் பேராசிரியர் முனைவர் சுரேஷ் கோதேராவ், ஒடிசா பகுத்தறிவாளர் கழகத்தின் பேராசிரியர் தானேஸ்வர் ஆகியோர் உரையாற்றினர். நாத்திக மய்யத்தின் மூத்த உறுப்பினர் மனோரமா, நியான்தா மற்றும் மாநாட்டு இணை ஒருங்கிணைப்பாளர் விகாஷ் கோரா ஆகியோர் உரையாற்றிய பின்னர் தொடக்க நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நண்பகல் உணவிற்குப் பின்னர் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் இணை அரங்க நிகழ்வுகளாக நடைபெற்றன. கருத்தரங்க உரைகளுக்குப் பின்னர் அவை குறித்த விவா தங்களும் நடைபெற்றன; உரையாற்றியோரின் விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இரண்டு நாள் மாநாட்டு நிகழ்வுகள் பல தலைப்புகளில் நடைபெற்று நிறைவு பெற்றது.
தென் மாநிலங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.
தொகுப்பு: வீ. குமரேசன்