சென்னையில் 1,302 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!
சென்னை, ஜன. 11- சென்னையில் ரவுடி ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டினார். சென்னையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையால் கடந்த 2024ஆம் ஆண்டு ரவுடிகள் தொடர்பான குற்றங்கள் குறைந்துள்ளது.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவுப்படி பெருநகர காவல் எல்லையில் ரவுடிகள் பழிவாங்கும் கொலைகள், முன்விரோதக் கொலைகள் முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை பெருநகர காவல்துறையில் நுண்ணறிவு பிரிவில் புதிதாக உதவி ஆணையர் தலைமையில் ‘ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு’ தொடங்கப்பட்டது. இந்த புதிய பிரிவானது சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி கேட்டரியாக ரவுடிகளை தரம் பிரித்து அவர்களின் குற்றவழக்குகள் விபரங்களை சேகரித்தனர். அதேநேரம் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கொடுஞ்செயல் குற்றவாளிகளின் விபரங்களும் பெற்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தப்பி ஓட்டம்
காவல் ஆணையர் அருண் எடுத்த அதிரடியால் சென்னையில் ஏ மற்றும் ஏபிளஸ் ரவுடிகள் அனைவரும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர். இருந்தாலும், அவர்களை விடாமல் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு தனிப்படையினர். ஏ மற்றும் ஏபிளஸ் ரவுடிகளை வெளிமாநிலங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட மாநில காவல்துறை உதவியுடன் கைது செய்து வருகின்றனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியான ரவுடி சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணா ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய பெருநகர காவல்துறை பன்னாட்டு காவல்துறை உதவியுடன் நடவடிக்ைக எடுத்து வருகிறது.
குண்டர் தடுப்புச் சட்டம்
கடந்த 2022ஆம் ஆண்டு 469 குற்றவாளிகளும் 2023ஆம் ஆண்டு 714 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு 591 ரவுடிகள், 79 திருட்டு வழக்கு குற்றவாளிகள், 300 போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் உட்பட மொத்தம் 1,302 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு இல்லாமல் கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ரவுடிகள் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் நேரில் சென்று ஒவ்வொரு வாரமும் கையெப்பம் பெற்று அறிக்கை அளித்து வருகின்றனர். இத்தகைய சிறப்பான பணிகளை மேற்கொண்ட புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு’ உதவி காவல் ஆணையர் தலைமையிலான குழுவினரை காவல் ஆணையர் அருண் நேற்று (10.1.2025) தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ்கள் வாங்கினார்.