புதுடில்லி, ஜன.11 தலைநகர் டில்லியில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக டில்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று (10.1.2025) காலை 100–க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
டில்லி பன்னாட்டு விமான நிலையம் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. டில்லியில் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.