சோழங்கநல்லூர் சரஸ்வதி
“பல கிராமங்களை ஒன்றாக இணைத்து, ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பார்க்கு, பிரச்சார சினிமா, டிராமா, தமாஷ் அறை, வாசக சாலை, புத்தக சாலை, ரேடியோ நிலையம், நல்ல ரோடு, கால அளவுப்படி போக்குவரத்துள்ள பஸ் ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், நன்றாய் படித்த ஒரு நீதிபதி, சகல சாமானும் கிடைக்கத்தக்க கடைகள் ஏற்பட வேண்டும். கிராமங்களை எல்லாம் ஒழித்து நகரமாக்க வேண்டும். நகர மக்களைப் போல் கிராம மக்களையும் சுகமனுபவிக்க செய்ய வேண்டும்,” என்பது கிராம வளர்ச்சிக் குறித்த பெரியாரின் பார்வை!
ஒரு அரசாங்கம் திட்டம் தீட்டுவதை விட, ஒரு விஞ்ஞானி ஆய்வு செய்வதை விட மேலானது பெரியாரின் அறிவுத்திறன்! அவர் சொன்னதை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கங்கள். அவரளவில் கிராமங்களுக்கு என்ன செய்தார்? அறிவைக் கொடுத்தார், பகுத்தறிவைப் பரப்பினார், பள்ளிகள் உருவாகக் காரணமாக இருந்தார், ஜாதி, மதத்தை விட்டொழிக்க செய்தார், இறுதியில் அவர்களின் சுயமரியாதையை மீட்டுக் கொடுத்தார். இந்தத் தலைகீழ் புரட்சியால் தான், தமிழ்நாட்டின் குக்கிராமத்து மகளிர் கூட பகுத்தறிவாளர்களாக, கடவுள் மறுப்பாளர்களாக வலம் வருகிறார்கள்.
படிப்பறிவு மிகக் குறைவு, எழுதப் படிக்கத் தெரியாது, வாய்ப்பு, வசதிகள் இல்லாத கிராமம், பக்கத்து நகரங்களுக்குக் கூட பெரிதாகப் போனதில்லை. ஆனால் ஜாதி, மதம், மூடநம்பிக்கை, கடவுள் என எதுவும் வேண்டாம் என வாழ்கிறார்கள். அதேநேரம் உயர் கல்வி முடித்திருக்கிற, பெரும் பதவி வகிக்கிற, உலக நாடுகள் சுற்றுகிற, இலட்சங்களில் சம்பாதிக்கிற ஒருவர் சாணியைப் பார்த்தால் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார், சடங்கு, சம்பிரதாயம் என மூழ்கிக் கிடக்கிறார், கடவுள் தான் அனைத்திற்கும் காரணம் என நம்புகிறார் என்றால், இவர்கள் இருவரில் யார் அறிவாளி?
மூன்று தலைமுறைக்கு முன்பே இதுபோன்ற ஆயிரக்கணக்கான அறிவாளிகளைக் கிராமங்களில் உருவாக்கியவர் தந்தை பெரியார்! அதனால்தான் அவர்களின் சிந்தனைகள் கூர்மையாக இருக்கின்றன. இயக்கச் சந்திப்பில் இவ்வளவு கிராம மகளிர் கிடைப்பதற்கான காரணமும் அதுதான்! அந்த வகையில் அம்மா சரஸ்வதி அவர்களை, இந்த வார நேர்காணலுக்காக சோழங்கநல்லூரில் சந்தித்தோம்.
அம்மா வணக்கம்! உங்களுக்குப் பெரியார் கொள்கை எப்போது அறிமுகமானது?
நான் பிறந்தது திருவாரூர் மாவட்டம் வேலங்குடி கிராமம். வசிப்பது சோழங்கநல்லூர் கிராமத்தில். எங்கள் சுயமரியாதைத் திருமணத்தை அப்போதைய மாவட்டத் தலைவராக இருந்த அந்தோணிசாமி அவர்கள் நடத்தி வைத்தார்கள். பெரியார் கொள்கையின் முக்கியத்துவம் குறித்துத் தொடர்ந்து அவர் எடுத்துச் சொல்வார். எங்கே கூட்டம் நடந்தாலும் இணையரையும், என்னையும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என அழைப்பார். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திற்கும் செல்வோம். அதன் பிறகே இந்தக் கொள்கைக் குறித்துத் தெரிந்து கொண்டேன். இணையர் பெயர் சீனிவாசன். 2022 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார்கள்.
சில நேரம் யாராவது வீட்டில் இருக்க வேண்டும் என்கிற சூழல் வரும்போது எனது இணையர், “நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் நிகழ்ச்சிக்குப் போய் வாருங்கள்”, என்பார். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பெண். இருவருக்குமே சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தோம். அதில் ஒரு திருமணத்தை அய்யா எஸ்.எஸ்.மணியம் அவர்கள் நடத்தி வைத்தார்கள். பெரிய அளவில் தோழர்கள் வந்தார்கள். கிராமமே வியந்து பார்த்தது. நான் வட்டாரத் தலைவர் மற்றும் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்திருக்கிறேன். நாகையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டிற்கும் வேலை செய்துள்ளேன். இப்போது எனக்கு 70 வயது ஆகிறது.
போராட்டங்களில் கைதாகி சிறையில் இருந்த அனுபவங்கள் இருக்கிறதா?
திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான போராட்டங்களில் பங்கேற்று ஒருநாள் சிறையில் பலமுறை இருந்துள்ளேன். குறிப்பாக
69 விழுக்காடு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 15 மகளிர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் இருந்தோம். தண்டனை நாட்கள் முடிந்த நிலையில் நீதிபதி முன்பு அழைத்துச் சென்றார்கள். மகளிராக இருந்து கொண்டு ஏன் போராட்டம் செய்கிறீர்கள்? உங்கள் தலைவர் வீரமணி சொன்னால் எதுவும் செய்வீர்களா? எனக் கேலி செய்யும் தொனியில் கேட்டார்.
“எங்கள் வீட்டுப் பிள்ளைக்கும், ஆசிரியர் வீட்டுப் பிள்ளைக்கும் போராட்டம் செய்யவில்லை; உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் சேர்த்தே போராட்டம் செய்கிறோம்”, என மகளிர் நாங்கள் கூறினோம். இதனால் கோபமடைந்த அவர், மீண்டும் 15 நாள் வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். எனவே மீண்டும் வேலூர் சிறைக்குச் சென்றுவிட்டோம்.
அதுசமயம் அங்கிருந்த பெண் காவலர் எங்களுக்கு மிகுந்த சிரமம் கொடுத்தார். சோதனை என்கிற பெயரில் அடிக்கடி மன உளைச்சல் தந்தார். ஒரு கட்டத்தில் அனைவரும் சேர்ந்து எதிர்க்க தொடங்கிவிட்டோம். “கொடும்பாவியை எரித்துவிட்டு வந்துள்ளோம்; குடும்பத்தைப் பிரிந்து வந்துள்ளோம்! போராட்டம் எங்களுக்குப் புதிதல்ல”, என்று கூறி, தேவைப்பட்டால் சிறையிலேயே போராட்டம் செய்யவும் தயங்கமாட்டோம் எனக் கூறினோம்.
இந்நிலையில் தலைமைக் கழகத்திற்குத் தகவல் கொடுத்து, வழக்குரைஞர் அருள்மொழி மூலமாக அந்த ‘ஜெயிலர்’ மீது புகார் கொடுத்துவிட்டோம். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதும், ஜெயிலர் தன் நிலையில் இருந்து பின்வாங்கி, வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அந்தப் போராட்டத்தின் போது ஒரு மாதம் சிறையில் இருந்துவிட்டு வந்தேன்.
கொள்கையில் இல்லாத கிராம மக்கள், இந்த இயக்கத்தை எப்படி பார்ப்பார்கள்?
கொள்கையில் இருக்கிறார்களோ, இல்லையோ பெரியார் மீது மதிப்பும், இந்த இயக்கத்தின் மீது அன்பும் வைத்திருப்பார்கள். எங்கள் கிராமத்திற்குத் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் ஒரு மருத்துவமனை வழங்கினார்கள். ஆனால் அதற்கு முன்பு ஒரு பெரும் நிகழ்வே நடந்துள்ளது. ஆமாம்! ஒரு சில காரணங்களால் எங்கள் கிராமத்தில் பெரும் கலவரம் ஒன்று எழுந்தது. காவலர்கள் ஆண்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்களை மிரட்டினர், அடித்தனர். எங்கள் கிராமமே செய்வதறியாது திகைத்து நின்றது.
அந்த நேரத்தில் தான் ஆசிரியர் அவர்களுக்குத் தகவல் தெரிவித்தோம். ஆசிரியர் அவர்களும் உடனடியாக எங்கள் கிராமத்திற்கு வந்தார். “யாரும் பயப்பட வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன்”, என ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினார். அதன் பிறகு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கிராமத்தில் சுமூகமான நிலையைக் கொண்டு வந்தார் ஆசிரியர் அவர்கள்!
கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்திருப்பார்களே?
ஆமாம்! “எந்தப் பலனும் இல்லாமல் ஒருவர் இப்படி செய்வாரா?” எனக் கிராம மக்கள் வியந்தனர். அதேபோல இந்தக் கிராமத்தில் மருத்துவ வசதி இல்லாமல் இருந்தது. யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் திருவாரூர் அல்லது நாகப்பட்டினம் போக வேண்டும். அதுவும் மோசமான நிலை என்றால், கட்டில் மேல் வைத்துத் தூக்கிக் கொண்டு போவார்கள். இந்நிலையில் கிராம மக்கள் சேர்ந்து ஆசிரியரிடம் விண்ணப்பம் செய்தோம். அய்யா அவர்கள் உடனடியாக மருத்துவமனை கட்டிக் கொடுத்தார்கள்.
“சோழங்கநல்லூர் என் தாய் வீடு” என ஆசிரியர் கூறியதை எங்களால் மறக்கவே முடியாது!
அதுமட்டுமின்றி இந்தக் கிராமத்திலும் குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்ற நிலை இருந்துள்ளது. நாய், ஆடு, மாடு எல்லாம் குளத்தில் தண்ணீர் குடிக்கிறது, மனிதர்கள் பயன்படுத்தக் கூடாதா? எனப் போராட்டம் நடந்ததாகச் சொல்வார்கள். பெரியார் இல்லை என்றால் இங்கு எந்த மாற்றமும் இல்லை என வயது மூத்தவர்கள் கூற கேட்டுள்ளேன். அதேநேரம் இன்றைக்கு இந்தக் கிராமத்தைச் சுற்றி ஒரு பார்ப்பனர் குடும்பங்கள் கூட இல்லை.
விடுதலை நாளிதழ் படிக்கும் வாய்ப்பு இருக்கிறதா?
என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? ஒருநாள் தவறாமல் விடுதலை வாசிப்பேன். அதுமட்டுமின்றி நூல்களும் படிப்பேன். மேலோட்டமாக இன்றி, உள்வாங்கிப் படிப்பேன். என்ன… எவ்வளவு படித்தாலும் நாங்களே வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் சிறு, சிறு நிகழ்ச்சிகளில் கூட எங்களுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.
அண்மையில் ஆசிரியர் அவர்களைப் பார்த்தீர்களா?
ஆசிரியர் அய்யாவின் பிறந்த நாளன்று சென்னை செல்ல திட்டமிட்டிருந்தேன். உடல்நிலை காரணமாக செல்லவில்லை. பிறகு கேரளா வைக்கம் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆசிரியர் அவர்களைப் பார்த்தேன். ஆசிரியர் அய்யாவின் உழைப்புதான் அவர்களின் இளமைக்குக் காரணம். மககளுக்கு செய்கிற தொண்டில்தான் அவர்கள் ஊக்கம் பெறுகிறார்கள். தோழர்களைப் பார்த்தாலே ஆசிரியருக்கு மகிழ்ச்சி வந்துவிடும்”, என அம்மா சரஸ்வதி அவர்கள் தம் உணர்வுகளை அழகாகப் பிரதிபலித்தார்!