இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்னும் உச்சவரம்பைத் தகர்ப்போம்!
ராகுல் காந்தி முழக்கம்!
அய்தராபாத், நவ.6 இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்னும் உச்சவரம்பைத் தகர்ப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஜாதிய பாகுபாடு உலகில் மிக மோசமானவற்றுள் ஒன்று என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள ஜாதி ஆய்வு நடவடிக்கை நாட்டிற்கு முன்மாதிரியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில், மாநில காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கலந்துகொண்டனர்.
மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் தொண்டர்கள் முன்பு ராகுல் காந்தி பேசியதாவது, இந்தியாவில் ஜாதிய பாகுபாடு தனித்துவமானது. உலகின் மிக மோசமானவற்றுள் ஒன்றாகக் கூறலாம். 50 சதவீத இடஒதுக்கீடு என்ற செயற்கையான தடையை காங்கிரஸ் தகர்க்கும். நாட்டில் தாழ்த்தப்பட்டோர் எத்தனை பேர்? பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு? பழங்குடி மக்களின் எண்ணிக்கை எத்தனை? என்பதை தெரிந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி அச்சப்படுவது ஏன்? நாட்டில் நிலவும் பாகுபாட்டை சரிசெய்ய முயற்சிப்பது குறித்து மோடி பேச மறுப்பது ஏன்? இங்கே அனைத்துத் துறையிலும் சரியான பங்களிப்பு மறுக்கப்படுகிறது. ஒரு சாரரின் ஆதிக்கம் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு தொடர்கிறது.
ஜார்க்கண்டடில் இட ஒதுக்கீடு உயர்த்தப்படும்!
ஜார்க்கண்ட்டில் பட்டியலினத்தோருக்கு 28 சதவீத இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட் டோருக்கு 12 சதவீதமாக, பிற்ப டுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமாக இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என இந்தியா கூட்டணி உறுதி அளித்துள்ளது.
ஏழை மக்களுக்கான இலவச ரேஷன் பொருள்கள் 5 கிலோவிலிருந்து 7 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும். சமையல் எரி வாயு உருளை விலையை ரூ.450ஆக குறைப்போம். மாநிலத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். ஏழை மக்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.