திருப்பதி தேவஸ்தானத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு

viduthalai
2 Min Read

திருமலை, ஆக.28 ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மேனாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, மேனாள் நிர்வாக அதி காரி தர்மாரெட்டி உட்பட மேலும் பலருக்கு தாக்கீது அனுப்பப் பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறீவாணி அறக்கட்டளை நுழைவுச் சீட்டில் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணம், மீனவர்கள், எஸ்சி, எஸ்டி-க்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோயில்களை கட்டவும், நலிந்த கோயில்களை மராமத்து செய்யவும், தீப, தூப நைவேத்தியங்களுக்கு உதவ வும் மட்டுமே பயன்படுத்துவதாக தேவஸ் தானம் அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை எத்தனை கோயில்கள் கட்டப் பட்டன? எவ்வளவு செலவு செய்தனர்? என்பது குறித்த விவரங்கள் இல்லாததால் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ரூ.530 கோடி வரை முறைகேடு: மேற்கூறிய செயல்பாடுகளில் ரூ.530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிவில் கான்டிராக்ட் வழங்கியதிலும் கோடிக்கணக்கில் முறை கேடுகள்நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆதலால், அப் போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி மற்றும் திருப்பதி மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் அப்போதைய அறங்காவலர் குழு தலைவருமான கருணாகர் ரெட்டியிடம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை மட் டுமே கான்டிராக்ட் பணிகள் நடத்தப் படும். ஆனால் இவர்களது நிர்வாகத் தில் மட்டும், சிம்ஸ் தேவஸ்தான மருத்து வமனைக்கு ரூ. 77 கோடி, கோவிந்தராஜ சத்திரம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்ட ரூ. 420 கோடி ஒதுக்கப் பட்டன. மேலும், இதுபோல் பல சிவில் பணிகளுக்கும் கோடிக்கணக்கில் நிதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கமிஷன் பல கோடி பெற்றுள்ளதாக வந்த புகார்களின் பேரில் தர்மாரெட்டி மற்றும்கருணாகர் ரெட்டிக்கும், தேவஸ்தானஆடிட்டர் பாலாஜி, மேனாள் அறங்காவலரான ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டிக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தேவஸ்தான சிம்ஸ் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவ மனையான பேர்ட்ஸ் மருத்துவமனையில் தர்மா ரெட்டி சில மாதங்கள் வரை கூடுதல் பொறுப்பில் இருந்தபோது, சட்டத்திற்கு புறம்பான வகையில் பல்வேறு பணி நியமனங்களும் நடை பெற்றதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. இது குறித்தும் விளக்கம் அளிக்க கோரி தாக்கீது பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தேவஸ்தானத்தில் நடந்த பல கோடி ரூபாய் முறை கேடுகள் விரைவில் வெளி உலகிற்கு தெரிய வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *