புதுச்சேரி, ஆக. 24- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51- A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கருத்தரங்கம் 21-8-2024 அன்று மாலை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் இளைஞரணித் தலைவர் தி.இராசா வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் மு. குப்புசாமி செயலாளர் கி. அறிவழகன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் இளைஞரணிச் செயலாளர் ச.சித்தார்த் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் ஆகியோர் உரையாற்றினர்.
புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி நடைபெற்ற கழகத்தின் செயற்பாடுகள் பற்றியும் புதுச்சேரி அரசின் அவலங்கள் பற்றியும் எடுத்துக் கூறி விரிவான முறையில் உரையாற்றினார்.
துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைத்தார் தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார் நன்றி கூறினார். இளைஞரணி தோழர் பி.அறிவுச்செல்வன் ” கடவுள் மறுப்பு” உறுதிமொழியை வாசித்தார்.
கருத்தரங்கம் நிறைவில் பிறந்தநாள் விழா காணும் புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணியின் தொண்டறப்பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்பினர் சால்வை மற்றும் புத்தகங்கள் வழங்கி சிறப்புச் செய்தனர்.
துணைப் பொதுச் செயலாளர் தன்னுடைய உரையினை மிக நேர்த்தியாக வடிவமைத்து இன்றையக் காலக்கட்டத்தில் மூடநம்பிக்கை எந்தெந்த வகையில், புதுப்புது வடிவத்தில் அறிவியல் சாதனங்களான கணினி, கைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தி மக்கள் மத்தியில் மூடத்தனமானக் கருத்துகள் புகுத்தப்படுகின்றது என்பதனையும் அதற்கு திராவிடர் கழகம் ஆற்றி வரும் எதிர்வினைகள் பற்றியும் விளக்கிப் பேசினார்.
பழைய கிராமபோன் தட்டு முதல் இன்றைக்கு வந்துள்ள பெரியார் ஒடிடி வரை மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை விளக்கியும் தொடர்ந்து பெண்ணுரிமை பாதுகாப்பு என்கின்ற அளவில் இன்றைக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும் அதற்கு பெண்களை நம்முடைய இல்லங்களில் எப்படி அறிவுரைகள் சொல்லி வளர்க்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அரசியல் சட்டம் 51A [h] பிரிவு இந்த மக்களுக்கு தெரிவிக்கிறது என்பதையும் அதற்காக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை எல்லாம் சொல்லி மிக நேர்த்தியாக தன்னுடைய உரையினை வழங்கினார். வந்திருந்த பார்வையாளர்களும் கழகத் தோழர்களுக்கும் சிறப்பான ஒரு உரையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி நடைபெற்ற இரு சக்கர வாகனப் பரப்புரைப் பிரச்சார பயணத்தில் புதுவையில் இருந்து சேலம் வரை சென்ற புதுச்சேரித் தோழர்கள் பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனி, இளைஞரணித் தோழர்கள் ச.சித்தார்த், பி. அறிவுச்செல்வன்,சு. சத்தியசீலன் ஆகிய தோழர்களுக்கு துணைப் பொதுச் செயலாளர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் மதுரை நட்புறவு கழகம் சார்பில் “புரட்சிக் கலையரசி” என்ற பட்டம் பெற்றுள்ளார். மேலும் அவருக்கு அலுவலகத்தில் “சார்பு செயலாளராகப்” பதவி உயர்வு பெற்றுள்ளார் அதனைப் பாராட்டிச் சிறப்பு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஒத்த கருத்துடைய சமூக அமைப்பு தோழர்கள் லோகு.அய்யப்பன், வீர. மோகன், இரா.இளங்கோவன், பி.பிரகாஷ், இராஜா, ந. மு. தமிழ்மணி, சீ. சு சுவாமிநாதன், தீனா, இரா.மங்கையர்செல்வன், தூ.சடகோபன், அழகர், தமிழ் மல்லன், பைரவி, மாணிக்கம், கோ.கலியபெருமாள், அமுதகுமார் உள்ளிட்ட பல்வேறு சமூக ஜனநாயக இயக்கத் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன், இளைஞரணித் துணைத் தலைவர் ச.பிரபஞ்சன், புதுச்சேரி நகராட்சி வடக்குப் பகுதி தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் களஞ்சியம் வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.குமரன், ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன், முகமது நிஜாம், பாகூர் கொம்யூன் தலைவர் இராம.சேகர், பெ.தாமோதரன், ஜெ.வாசுகி பாலமுருகன், மு.வீரமணி,திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.