கம்யூனிஸ்ட் கட்சியைப் புகழ்ந்த பா.ஜ.க. அமைச்சர்

2 Min Read

திருச்சூர், ஜூன் 17- ‘கேரளத்தைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.கருணாகரன், கேரள மார்க்சிஸ்ட் மூத்த தலைவா் மறைந்த இ.கே.நாயனார் ஆகியோர்தான் எனது அரசியல் குரு’ என பாஜகவை சோ்ந்த ஒன்றிய இணையமைச்சா் சுரேஷ் கோபி கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்திரா காந்தி, இந்தியாவின் அன்னை என்றும் அவா் தெரிவித்தார்.
நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் கேரளத்தின் திருச்சூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கொள்கைகளில் எதிரெதிர் துருவங்களாக செயல்படும் நிலையில், பாஜக எம்.பி.யான சுரேஷ் கோபி, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை தனது அரசியல் குரு என்று கூறியுள்ளது பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என மூன்று கட்சிகளின் வட்டாரத்திலும் விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது. கேரளத்தில் பல்வேறு தரப்பினரையும் அரவணைத்து பாஜகவை வளா்க்கும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.

திருச்சூர் மக்களவைத் தொகுதியில் கே.கருணாகரனின் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான முரளீதரனை சுரேஷ் கோபி மூன்றாவது இடத்துக்குத் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு இடதுசாரி கூட்டணி வேட்பாளர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். திருச்சூரின் பூங்குன்னம் பகுதியில் கருணாகரன் நினைவிடத்தில் சனிக்கிழமை மரியாதை செலுத்திய சுரேஷ் கோபி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கருணாகரன் நினைவிடத்தில் நான் மரியாதை செலுத்தியதை அரசியல்ரீதியாக தொடா்புபடுத்த வேண்டாம். எனது ‘அரசியல் குருவுக்கு’ மரியாதை செலுத்தவே இங்கு வந்தேன். இடதுசாரி தலைவா் இ.கே.நாயனாரையும் எனது அரசியல் குருவாக கருதுகிறேன். அண்மையில் நாயனாரின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினேன்.

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் தந்தையாக திகழ்ந்தவா் கருணாகரன். அவர் மிகவும் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் சிறந்த நிர்வாகியாக செயல்பட்டார் என்றார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் கோபி, ‘இந்திரா காந்தி, இந்தியாவின் அன்னையாகத் திகழ்ந்தவர்’ என்றார்.
பின்னா், திருச்சூரில் உள்ள லூா்து மாதா கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்ற சுரேஷ் கோபி அங்கு பிரார்த்தனையில் பங்கேற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மகளின் திருமணத்தின்போது இந்த தேவாலயத்தில் உள்ள மாதா சிலைக்கு தங்கக் கிரீடத்தை சுரேஷ் கோபி காணிக்கையாகச் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *