தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள்

9 வயது முதல் 93 வயது வரை
கலந்து கொண்ட “பெரியார் நடை!”
கலந்து கொண்ட “பெரியார் நடை!”
தந்தை பெரியாரின் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில், சமூக நீதி சமத்துவத்திற்கான, “பெரியார் நடை” நடைபெற்றது. கழக தொழில் நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் வி.சி.வில்வம், பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் செந்தாமரை, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில், 20.09.2026 அன்று, காலை 6:30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இந்தப் பயணம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் – தந்தை பெரியார் சிலை அருகில் தொடங்கி, சேவா சங்கம், அகில இந்திய வானொலி நிலையம், நீதிமன்றம், எம்ஜிஆர் சிலை, அரசு மருத்துவமனை, புத்தூர் நால்ரோடு, “பெரியார் மாளிகை” என, 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இந்நடை பயணத்தில் 9 வயது பெரியார் பிஞ்சுகள் முதல் 19 வயது கல்லூரி மாணவர்கள், 29 முதல் 39 வயது வரையிலான இளைஞர்கள் 49 முதல் 59 வரை நடுத்தர வயதினர் கலந்து கொண்டனர். இவர்களுடன் சரிக்குச் சரியாக 93 வயது கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு, இளைஞர்களும் வியக்கும் வண்ணம் நடை போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்வரிசையில் பதாகைகள் பிடித்துக் கொண்டு மகளிரணித் தோழர்கள் செல்ல, அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் வீறு நடை போட்டு நடந்து வந்தார். 6:30 மணிக்கு தொடங்கி, புத்தூர் பெரியார் மாளிகைக்கு 7:10 க்கு வந்து சேர்ந்தனர். அனைவருக்கும் சிற்றுண்டி உணவு பெரியார் மாளிகையில் வழங்கப்பட்டது.
