ஜகார்த்தா, செப். 14- இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இந்த தீவுகளுக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. அங்கு சுரபயா நகரில் இருந்து பன்ஜார்மாசின் நகருக்கு நேற்று பயணிகள் கப்பல் புறப்பட்டது. இதில் மாலுமிகள், ஊழியர்கள், பயணிகள் உட்பட 234 பேர் பயணம் செய்தனர். கிழக்கு ஜாவா கடல் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கியது.
கப்பலில் இருந்த பயணிகள் கடலில் குதித்துத் தத்தளித்தனர். அந்தப் பகுதியில் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. கப்பலில் பயணம் செய்த 130 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் இந்தோனேசிய தேசிய மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து மீட்புப் படை அதிகாரிகள் கூறும்போது, “கிழக்கு ஜாவா கடலில் கப்பல் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் கண்காணிப்பு விமானம் மூலம் தேடுதல் பணி நடைபெறுகிறது. ரோந்து படகுகள், கடற்படை கப்பல்களும், காணாமல் போன கப்பலைத் தேடி வருகின்றன” என்று தெரிவித்தனர். கடந்த 2020 முதல் 2026 வரையிலான காலத்தில் இந்தோனேசியா முழுவதும் 111 கப்பல் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
சிலியில் முதியோர் இல்லத்தில்
ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழப்பு!
ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழப்பு!
சாண்டியாகோ செப். 14- சிலி நாட்டில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் அரோகெனியா மாகாணம் பிட்ருப்கியூன் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இந்த முதியோர் இல்லத்தில் 26 முதியோர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், இந்த முதியோர் இல்லத்தில் நேற்று முன் நாள் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென முதியோர் இல்லத்தில் உள்ள அனைத்து அறைகளுக்கும் பரவியது. தீ விபத்தால் அதிர்ச்சியடைந்த முதியோர் அனைவரும் அலறியடித்து வெளியேற முற்பட்டனர்.
ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி முதியோர் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். எஞ்சிய 10 பேர் லேசான காயங்களுடன் உயர் தப்பினர். இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கோவில் எபோலா பாதிப்பு எண்ணிக்கை ஏழாயிரமாக உயர்வு!
கின்ஷாசா செப். 14- காங்கோவில் எபோலா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,022 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,398 ஆக அதிகரித்துள்ளது.
காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருகிறது. இதையடுத்து எபோலா வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
