மருது பாண்டியன்
சோசலிச மய்யம்
எப்போதெல்லாம் சமூக நீதிக்கு ஆபத்து வரு கிறதோ, எப்போதெல்லாம் சமூக நீதிக்கு எதிராக ஆளும் வர்க்கங் களும், பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கமும் முயலுகிறதோ, அப்பொழு தெல்லாம் உடனடியாகக் களத்தில் இறங்கிப் போராடி, ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுவது திராவிட இயக்கங்கள்தாம். குறிப்பாக திராவிடர் கழகம்.
2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஜாதிகளின் அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சமூகநீதி சக்திகளும், ஜனநாயக ஆற்றல்களும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வருகின்றனர். பிகார் தேர்தலையொட்டி பாஜக அரசு கூட, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்போம் என்ற வாக்குறுதியும் அளித்தது. கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பையும் எடுப்பதற்கு பாசக அரசு போக்கு காட்டி வருகிறது.
அரசமைப்புச் சட்டத்தில் class – வகுப்பு என்றுதான் குறிக்கப்பட்டிருக் கிறதே ஒழிய Caste – ஜாதி என்று குறிப்பிடப்படவில்லை என்ற பித்தலாட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்பதையும் தவிர்க்க நினைக்கிறது. இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிய பங்கீடு வழங்காமல் ஏமாற்ற முனைகிறது. சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க திட்டமிடுகிறது இந்துத்துவ ஆர்எஸ்எஸ் கும்பலும் பாஜக அரசும்.
ஒன்றிய பாசிச பாஜக அரசின் பித்தலாட்டத்தை கண்டுணர்ந்த திராவிடர் கழகம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் போராட்டத்தை அறிவித்திருந்தது. சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏற்கெனவே ஆசிரியர் அவரது அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டியபடி வகுப்பிற்கும், ஜாதிக்கும் உள்ள உறவுகளையும், விளக்கங்களையும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் சுட்டிக்காட்டி விரிவாகப் பேசினார். குறிப்பாக இந்திரா சஹானி வழக்கில் இவை பற்றி விவாதிக்கப்பட்டிருப்பதை மீண்டும் விளக்கிப் பேசினார். இட ஒதுக்கீடு என்பதே ஜாதிகளின் அடிப்படையில் தான் கொடுக்கப்படுகிறது. சமூக ரீதியாக, கல்வி ரீதியாக (socially and educationally backward) பிற்படுத்தப்பட்ட மக்களின் தொகுப்பு என்பதே ஜாதிகளின் தொகுப்பாக தான் இருக்கிறது. ஆக இங்கு வகுப்பு என்பதே ஜாதிகளின் தொகுப்பு தான் என்பதை விரிவாக விளக்கிப் பேசினார்.
மேலும் இட ஒதுக்கீட்டைத் தொடங்கி வைத்தது சத்ரபதி சாஹூ மகாராஜாவோ, மைசூர் அரசரோ அல்லது ஜஸ்டிஸ் பாட்டியோ அல்ல. மனுதர்மவாதிகள்தான் முதன் முதலில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள். தலையில் பிறந்தவனுக்கு ஒரு ஒதுக்கீடு, தோளில் பிறந்தவனுக்கு ஒதுக்கீடு, தொடையில் பிறந்தவனுக்கு ஒரு ஒதுக்கீடு, காலில் பிறந்தவனுக்கு தனி ஒதுக்கீடு என்று ஒவ்வொரு வகுப்பிற்கும் பிறப்பின் அடிப்படையிலான, ஏற்றத்தாழ்வான ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது மனு தர்மவாதிகள் என்பதைச் சுட்டிக்காட்டி, இந்த சமூக அநீதியை ஒழிப்பதற்கு, சமத்துவ சமதர்ம சமூகம் படைப்பதற்கு நேர்மறையான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர்கள் தான் சாஹூ மகாராஜாவும், மைசூர் மகாராஜாவும், ஜஸ்டிஸ் கட்சியினரும் என்று வரலாற்றுத் தரவுகளில் இருந்து, அருமையாக ஒப்பிட்டுப் பேசினார்.
அரசியல் இயக்கங்கள் மட்டுமின்றி சமூக இயக்கங்களும் இந்தப் பேராபத்தை உணர்ந்து உடனடியாக களத்தில் இறங்கிப் போராட வேண்டும். ஜாதி வாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து எடுக்க வைக்க வேண்டும்; ஒன்றிய அரசைப் பணிய வைக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்த மாகச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அடியேனும் கலந்து கொண்டேன். அதன் தொடர்ச்சி யாக ஆசிரியர் அவர்களைப் பெரியார் திடலில் சந்தித்து உரையாட வாய்ப்பும் கிடைத்தது. அனைத்து சமூகத் தலைவர்களையும் இணைத்து இந்தப் போராட்டத்தை விரிவு படுத்த, திராவிடர் கழகம் உறுதுணையாக இருக்கும் என்பதையும் அன்போடு கூறினார்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்போடு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்!
அனைத்து சமூகநீதி இயக்கங்களும், ஜனநாயக ஆற்றல்களும், இடதுசாரி முற்போக்கு சிந்தனையாளர்களும் ஓரணியில் திரண்டு சமூக நீதியை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்!
அனைத்து சமூகங்களுக்கான சமூக நீதியை, உரிய இடப்பங்கீட்டை உறுதிப்படுத்துவோம்!
