கும்பகோணம், செப். 9- கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 148 ஆம் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டிகள் 06.09.2026 ஞாயிறு பிற்பகல் 02.00 மணிக்கு கும்பகோணம் பெரியார் மாளிகை உள் அரங்கில் நடைபெற்றது.
போட்டிகளுக்கு வருகை தந்த மாணவர்களை முன்னதாக வர வேற்று பகுத்தறிவாளர் கழக ஒன்றிய பொறுப்பாளர் அரங்க.வைரமுடி பதிவுகளை மேற்கொண்டார்.
பதிவுகள் முடிவுற்ற உடன் கவிஞர் வைரமுத்து இலக்கியப் பேரவைப் பொறுப்பாளர் ஆடலரசன் போட்டிகள் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்கு வழங்கினார். பகுத்தறிவாளர் கழக செயலாளர் பேராசிரியர் ம.சேது ராமன் பேசினார்.
மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன் பெரியார் இந்த சமுதாயத்தை எப்படி திருத்தினார் என்பதை எடுத்துக் கூறினார்.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து வருகை தந்த மாணவ மாணவிகளை நடுவர் அரங்க வைரமுடி பேசிட அழைத்தார். ஒவ்வொரு மாணவர் பேசி முடித்ததும் மாவட்ட காப்பாளர் தாராசுரம் வை.இளங் கோவன் தந்தை பெரியார் நூலினை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்.
பாவலர் பொன்னரசு பகுத்தறிவுக் பாடல்களை இனிமையாக பாடி உற்சாகப்படுத்தினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு பழனிவேல் மாணவர்களிடம் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை விளக்கிக் கூறினார்.
பரிசளிப்பு நிகழ்வும் பெரியார் பேசுகிறார் கூட்டம்- 11 நிகழ்வும் தொடங்கியது.
பெரியார் பேசுகிறார் தொடர் கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா தொடக்கத்தில் அய்ந்தாம் வகுப்பு மாணவர் நாச்சியார்கோவில் சங்கர்- உஷராணி மகன் தமிழின்பன் புரட்சிக்கவிஞர் பாடல்களைப் பாடினார்.
மாவட்டச் செயலாளர் பேரா.சேதுராமன் வரவேற்றார். முன்னிலை வகித்த மாவட்ட கழகத் தலைவர் கு.நிம்மதி சுருக்கமாக உரையாற்றி மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் திருநாகேஸ்வரம் வழக்குரைஞர் சு.விஜயகுமார், சு.சீனிவாசன் உரைக்கு பின்னர் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதை எவ்வளவு உன்னதமானது என்பதையும், தந்தை பெரியார் ஒரு அற்புதமான மனிதாபிமானி எனபதையும் எடுத்துக் கூறினார். விழாவில் பங்கேற்றோருக்கு சிறப்புச் செய்யப் பட்டது.
போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. பங்கேற்ற 25 மாணவ-மாணவிகளில் பரிசு பெற்ற 7 பேரைத் தவிர மற்ற எல்லோ ருக்கும் சான்றிதழும், புத்தகமும் வழங்கப்பட்டது.
முதல் பரிசினை பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மா.தேன்மொழி பெற்றார். இவருக்கு பரிசுத் தொகை ரூ 3000 மற்றும் சான்றிதழ், புத்தகம் ஆகியவற்றையும்,
இரண்டாம் பரிசினை பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி லூ.மா.பாஸ்டினா மிருணாளினி பெற்றார். இவருக்கு பரிசுத் தொகை ரூ 2000 மற்றும் சான்றிதழ், புத்தகம் ஆகியவற்றையும்,
மூன்றாம் பரிசினை குடந்தை அரசினர் கலைக்கல்லூரி மாணவி ம.காவியா பெற்றார். இவருக்கு பரிசுத் தொகை ரூ 1000 மற்றும் சான்றிதழ், புத்தகம் ஆகியவற்றையும்,
ஆறுதல் பரிசாக ராஜகிரி டான்சிறீ உபையதுல்லா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மு. பஷிமா ஆகியோரும் மற்றும் அய்.பாலகணபதி, ந.யாஸ்மின் பேகம், சே.வசந்தகுமார் ஆகியோரும் பெற்றார்கள்.
இவர்களுக்கான பரிசுகளை சிறப்புப் பேச்சாளர் கவிஞர் பழ.புகழேந்தி, மாநகர துணை மேயர் சுப.தமிழழகன், மாவட்ட தேமுதிக பொறுப்பாளர் வெங்கட்ராமன் ஆகியோர் அனைவரது கரவொலிக்கிடையே வழங்கினார்கள்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் க.திருஞானசம்பந்தம் நன்றி தெரிவித்தார்.
மாவட்ட, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழக தோழர்கள், பெரியாரியலாளர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
