கப்பலோட்டிய தமிழன்’, ‘செக்கிழுத்த செம்மல்’ என்று போற்றப்படும்
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் இன்று (05-09-1872)
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் இன்று (05-09-1872)
வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம். ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், தரும சங்க நெசவு சாலை, சுதேசிய பண்டக சாலை, வேளாண் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைத் தொடங்கினார். பிரிட்டிஷாரின் கப்பல் நிறுவனத்துக்கு எதிராக ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.
கொழும்பு சென்று ஒரு கப்பலை வாடகைக்கு ஒப்பந்தம் செய்து போக்குவரத்தைத் தொடங்கினார். ஆனாலும் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. சொந்தக் கப்பல் வாங்க பங்குதாரர்களைத் திரட்ட வட மாநிலங்களுக்கு சென்றார். எஸ்.எஸ்.காலியோ என்ற கப்பலுடன் திரும்பினார். தூத்துக்குடி கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.
1908இல் தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்குரைஞர் உரிமம் பறிக்கப்பட்டது. கோவை சிறையில் செக்கு இழுக்கவைத்து சித்ரவதைச் செய்தனர். விடுதலையான பிறகு, சென்னையில் குடியேறினார்.
தந்தை பெரியாருடன்….
‘ஈ.வெ.ரா.விடத்தில் உள்ள சிறப்புக் குணம் என்னவென்றால் மனதில் படும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமக் குணம் தான். அவரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு, அவர் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் என்னால் ஆன உதவியை அவ்வியக்கத்திற்கு செய்து வருகிறேன். அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் தமிழ்நாட்டில் எல்லாத் தலைவர்களைவிட பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையினால் அவருடைய உருவப் படத்தை ஒவ்வொருவரும் வைத்து காலை, மாலை பகல் முதலிய வேளைகளில் வணங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்” (நாகப்பட்டினத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்துப் பேசினார் வ.உ.சிதம்பரனார் – ‘குடிஅரசு’ – 10.6.1926).
அதே விழாவில் பெரியார் படத்தை நோக்கி விழுந்து வணங்கினார் வ.உ.சி. “இப்படி நீங்கள் பேசலாமா? இப்படி எனது படத்தை விழுந்து வணங்கலாமா?” என்று கேட்டிருக்கிறார் பெரியார். “அதில் என்ன தவறு?” என்று திருப்பிக் கேட்டுள்ளார் வ.உ.சி.
நாட்டின் விடுதலைக்காக தொழில், சொத்து, சுகம், வாழ்க்கை என அனைத்தையும் தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை 64 ஆவது வயதில் (18-11-1936) மறைந்தார்.
