புதுச்சேரி, செப். 01- மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டுமென புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று (31.8.2026) முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழிந்த அரசு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், நேயம் மக்கள் கழக தலைவர் நேரு, லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் ஆகியோர் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தனர்.
இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமி முன் மொழிந்து பேசியது: “புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதி ராகவும், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு மாறாகவும் தமிழ்நாடு எல்லை பகுதியை ஒட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மேகதாது என்ற இடத்தில் கருநாடக அரசு அணை கட்ட ஒன்றிய அரசு அனும திக்கக் கூடாது.
அணை கட்ட முயற்சிக் கும் கருநாடக அரசின் நடவடிக் கைகளுக்கு இந்த சட்டப்பேரவை தனது கண்டனத்தைப் பதிவு செய்வதுடன் எதிர்ப்பையும் பதிவு செய்கின்றது. மேகதாது அணை கட்ட கருநாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிரானதாகும். புதுச்சேரி உள்ளிட்ட காவிரிப் பாசன மாநிலங்களின் முன் இசைவு பெறாமல் மேகதாதவில் அணை கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கருநாடக அரசு இந்த விவகாரத்தில் மேலும் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்க தடை விதிக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பேரவை வலியுறுத்துகிறது.
மேலும், காரைக்கால் பகுதி விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட, மேகதாதுவில் கருநாடக அரசு, அணை ஏதும் கட்டாமல் தடுத் திடவும், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளைப் பாதுகாத்திடவும், புதுச்சேரி அரசு நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பது என்று இச்சட்டப்பேரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது,” என்றார்.
இதன்பின், எதிர்கட்சித் தலைவர் நாஜிம் (திமுக) பேசும்போது, “இது தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டு மாநிலங்கள் சம்மந்தப்பட்டது. இரண்டு மாநிலங்களும் ஒன்றாக கைகோத்து செயல்பட வேண்டும். நிச்சயம் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் நம்முடைய பங்கினை பெற முடியும், என்றார்.
எப்போதும், கருநாடக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காது. காவிரி பாயும் மாநிலங் களில் அனுமதியை பெற்றுதான் எந்த ஒரு அணையையும் கட்ட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், அந்த இரண்டு தீர்ப்புகளையும் மதிக்காமல் கருநாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட முயற்சித்து வருகிறது. கருநாடக முதலமைச்சர் தமிழகம் வந்தபோது அணை கட்டினால் தமிழகம், புதுச்சேரிக்கு நல்லது என்கின்றார். அதே முதலமைச்சர் கருநாடக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது தமிழ்நாட்டுக்கு ஒரு வாலி தண்ணீரை கூட தரமாட்டோம் என்கின்றார்.
ஆகவே, இது தொடர்பாக நமது அரசு உறுதியான நிலைப் பாட்டை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததை மனதார பாராட்டுவதோடு, இது சம்பந்தமான மேல் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்,” என்றார். மேலும், அரசு தீர்மானத்தை பேரவை தற்காலிக தலைவர் சபாநாயகர் அன்பழகன் குரல் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி கொண்டுவந்த இந்த அரசு தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
