வேலூர், ஆக 30 தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் 2023 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 1 கோடியே 13 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்த மேலும் 17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். இதன்படி, கடந்த மார்ச் மாதம் வரை மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் இத்தொகையைப் பெற்று வந்தனர்.
கூடுதலாக, தேர்தலுக்கு முன்பாக கோடைக்கால நிவாரணமாக 3 மாத உதவித்தொகையுடன் ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 ஒரே தவணையாக பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் முடிந்த பிறகு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங் களுக்கான உரிமைத்தொகை மாநிலம் முழுவதும் பல்லாயிரம் பேருக்குத் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மட்டும் சுமார் 3,000 முதல் 5,000 பயனாளிகளுக்கு இத்தொகை நிறுத்தப்பட்டிருக்கலாம் எனச் சமூக நலத்துறை தரப்பில் கூறப் படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “திட்டம் தொடங்கப் பட்டதில் இருந்து வழக்கமாக ஒவ் வொரு மாதமும் 15 முதல் 18-ஆம் தேதிக்குள் எங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும். ஆனால் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பணம் வரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் தெளிவான காரணத்தைக் கூறாமல் ஏதேதோ சொல்கிறார்கள்; ஆட்சியர் அலுவலகத்திலும் சரியான பதில் இல்லை.
இச்சூழலில், தவெக அரசு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது மற்றும் 3 இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்குவது சாத்தியமா என்பது தெரியவில்லை” என ஆதங்கத்துடன் தெரிவித்தனர். உரிமைத்தொகை நிறுத்தப் பட்டது குறித்து சமூக நலத்துறை அதி காரிகளிடம் கேட்டபோது, “பாதிக்கப் பட்ட பயனாளிகள் நேரில் வந்து முறையிடும்போதுதான் பணம் நிறுத் தப்பட்ட விவகாரமே எங்களுக்குத் தெரியவருகிறது. இது தொடர்பாகச் சென்னை தலைமையகத்தில் தான் விசாரிக்க வேண்டும்; மாவட்ட அளவில் எங்களது கவனத்திற்கு எந்தத் தகவலும் வரவில்லை” என்று தெரிவித்தனர்.
