புதுடில்லி, ஆக. 28- வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்திய அரசு நேற்று 10 டன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைத்த நிலையில் இன்று 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேபாளத்துக்காக 37.5 டன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள், உணவுப் பொட்டலங்களை ஏற்றிக் கொண்டு இரண்டாவது விமானம் புறப்பட்டுள்ளது. இந்தியா, நேபாள அதிகாரிகளுடன் நெருங்கிய, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது. நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வலுவான ஆதரவை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “பேரழிவை ஏற்படுத்தி உள்ள வெள்ளப்பெருக்கால் நேபாளத்துக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் 10 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி உள்ளோம். உயிரிழந்த குடும்பங்களுடனும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொள்கிறோம். இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியா நேபாளத்துடனும் அதன் மக்களுடனும் துணை நிற்கிறது” என தெரிவித்திருந்தார்.
அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் சிறீவஸ்தவா, நேபாளத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கடக் ராஜ் பவுடலிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
