சென்னை, ஆக. 27- ‘நேபாள பெருவெள்ள பாதிப்பில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இந்தப் பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
நேபாள வெள்ளப் பேரிடருக்கு
இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்கள், மருந்துகள் அனுப்பிவைப்பு
புதுடில்லி, ஆக. 27- நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள – திபெத் எல்லைப் பகுதிகளில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 750 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் 133 பேர் இந்தியர்கள். இந்நிலையில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு 10 டன் நிவாரணப் பொருட்கள், மருந்துகளை இந்தியா அனுப்பி உள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப்படை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தொடர்ந்து இந்திய வான்படை விரைந்து செயல்பட்டு சி-130ஜே வானூர்தி மூலம் சுமார் 10 டன் நிவாரண பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளது.
இதோடு சி-17 மற்றும் சி-130 வானூர்தி மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப உள்ளோம். மேலும், மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களும் செல்கிறது என்று அந்த பதிவில் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அந்த நிவாரண பொருட்களும், மருந்துகளும் நேபாளம் சென்றடைந்தது. அதை இந்தியா அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. இதை வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்துள்ளார்.
நேபாளத்தில் நேற்று (26.8.2026) காலை 8.30 மணியளவில் ரசுவா மாவட்டத்தில் போட்டே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
சற்றும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 100 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
