சென்னை, ஆக.25 பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் கொடை அளிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு குறைந்த வயதுடைய குழந்தையிடம் உறுப்புகளைக் கொடை பெறுவது தமிழ்நாட்டிலேயே இது முதல்முறையாகும்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஓராண்டு 7 மாதங்களே ஆன குழந்தை ஒன்று ஹைட்ரோசெபாலஸ் எனப்படும் பிறவிக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 6 நாள்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தது. மூளைத் தண்டுவட நீர் தலைக்குள்ளேயே சேகரமாகி திசுக்களை சேதப்படுத்தும் பாதிப்பு அது.
அத்தகைய பிரச்சினைக்குள்ளாகி குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சைகளை அளித்து வந்தனர். ஆனாலும், குழந்தையின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் மூளைச்சாவு அடைந்தது.
இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். அதன்படி இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டன.
இந்த உன்னத செயலுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனை சார்பில் குழந்தையின் உடலுக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு, 1 வயது 8 மாதம் வயதுடைய குழந்தை இதே மருத்துவமனையில் உடல் உறுப்புகளை கொடை செய்ததே இதுவரை குறைந்த வயதுடைய உறுப்பு கொடையாளராக இருந்தது. தற்போது இக்குழந்தை, தனது தியாகத்தால் அந்த சவுரவத்தைக் கைப்பற்றியுள்ளது.
