சென்னை, ஆக. 16- பி.எட். சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வில் முதல்கட்டமாக 1,800 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் 7 அரசுக் கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 2,040 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில் நடப்புக் கல்வி ஆண்டு (2026-2027) பி.எட். சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு ஜூன் 19ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 3,149 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, விருப்பமான கல்வியியல் கல்லூரியை தேர்வு செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி முடிவடைந்தது. கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கான பிடித்தமான கல்லூரியை தேர்வு செய்தனர்.
இந்நிலையில், முதல்கட்டமாக 1,800 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் 14.8.2026 அன்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்கள் இணையவழி விண்ணப்ப அய்டி-யை பயன்படுத்தி www.twise.ac.in என்ற இணையதளத்தில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒதுக்கீ்ட்டு ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 17 முதல் 21ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
