சென்னை, ஆக. 15- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று (14.8.2026)வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் நகராட்சி பகுதிகளில் சொத்துவரியை கடுமையாக உயர்த்துவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாமன்ற கூட்டங்கள் முறைப்படி நடத்துவதற்கு நகராட்சித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் நிர்வாக உத்தரவு மூலம் சொத்துவரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வழிகாட்டுதல்படிதான் நடைபெறுகிறதா? என்கிற வினாவும் எழுந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் குடும்பம் நடத்துவதே சவாலாக உள்ள நிலையில், சொத்து வரிகளை உயர்த்துவதை முதலமைச்சர் ஜோசப் விஜய் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
